கவுணாவத்தையில் வேள்வி ; பலியிடப்பட்டன 400 க்கும் மேற்பட்ட ஆடுகள்
கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோலபலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் இன்று அதிகாலை நடைபெற்றது.
அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமான வேள்வியில் 400 ற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. 150 ற்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன.
நள்ளிரவில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து அதிகாலையில் கடாக்கள் வெட்டும் நிகழ்வு ஆரம்பமாகியது.
ஆலய வாயிலில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்ட இடத்தில் பொது மக்கள் பார்வையிடா வண்ணம் இம்முறை கடாக்கள் வெட்டப்பட்டன.
கடாக்கள் வெட்டும் இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் நின்று கடாக்களைப் பரிசோதித்து வெட்டுவதற்கு அனுமதித்தனர்.
வழமைபோல இம் முறையும் அதிக எண்ணிக்ககையானவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
இதேவேளை நேற்று மாலை முதல் ஆலய சுற்றாடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
எனினும் மிருகபலிக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அதற்கான தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்ட நிலையில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பாரம்பரிய முறைப்படி வேள்வி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது