புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2014

அடியாட்களுடன் வந்த டக்ளஸே குழப்பத்துக்கு காரணம்: விக்கி- ஐவருக்கு காயம் என்று ஈ.பி.டி.பி அறிககை 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்துவந்த சம்பந்தமில்லாத வெளியாட்களுமே
காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம், அடிதடி சண்டையாகியதில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வர் காயமடைந்தனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மிகத் துரதிர்ஷ்டவசமாக திடீரென முடிவுக்கு வந்தது. இதற்கான முழுப்பொறுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் அவர் வெளியிலிருந்து கூட்டத்திற்குக் கொண்டு வந்த வெளியாட்களையுமே சாரும்.
தேர்தல் ஆணையாளரினால் அரசியல் சம்பந்தமாகவோ அரசியல் கட்சிகள் பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் உரை எதுவும் நிகழ்த்தக்கூடாது என்று இன்றைய கூட்டத்தில் அரச அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில் இணைத்தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையில் அரசியல் ரீதியாகப் பேசி வடக்கு மாகாண சபையையும் அதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் வடக்கு மாகாண சபையின் தேர்தல் விஞ்ஞானபனத்தையும் கடுமையாக விமர்சித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சர்வாதிகாரமாக அடக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் முயன்றார். இதனால் அங்கு குழப்பம் ஆரம்பமாகியது.
இதன்போது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாத மர்ம நபர்கள் சிலரும் குறுக்கிட்டுக் கொண்டனர். இதனால் குழப்பம் மேலும் அதிகரித்தது. அமைச்சர் டக்ளஸ் சார்பில் கலந்துகொண்டவர்கள் கையில் கிடைத்த பொருள்களால் வன்முறைத் தாக்குதல் நடத்தினர்.
இதனால் கூட்டத்தில் பதற்றம் தோன்றியது. மக்கள் பிரதிநிதிகளும் கூட்டத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இன்றைய ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு சம்பந்தமில்லாது அழைத்துவரப்பட்ட வெளியாட்களும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தயாரித்து எடுத்துவந்திருந்த நான்கு பக்க அரசியல் அறிக்கை வாசிக்கப்பட்டமையும், இது முற்கூட்டியே நன்கு திட்டமிட்டு குழப்பத்தை உண்டாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது.
மிகவும் வெட்கப்பட வேண்டிய இந்த வன்முறைத் தாக்குதலில் வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரத்தினம், சி.சிவயோகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். 
மேலும் சில உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின்போது பாதுகாப்புப் பிரிவினர் ஈ.பி.டி.பி.உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எவரும் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதும் கவலைக்குரியதே என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
தமது தரப்பில் ஐந்து பேருக்கு காயம் என்று ஈ.பி.டி.பி. கட்சி அறிக்கை!
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பில் தமது தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்துள்ளனர் என்று ஈபிடிபி அறிவித்துள்ளது.
இது தொடர்ப்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் இராஜ்குமார், அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்திலேயே இணைத்தலைமைக்கு கட்டுப்படுமாறு இணைத்தலைவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை மீறி கூட்டமைப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இணைத்தலைமைக்கு கட்டுப்பட்டு கூட்டத்தை தொடர்வதற்கு உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதனை நிராகரிக்கும் வகையில் கூட்டமைப்பினர் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர்.
இதில் கூட்டமைப்பினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை தாக்கும் வகையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் முன்னோக்கிச் சென்ற போது அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ராஜ்குமார், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சிறிரங்கேஸ்வரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா, வலி.தெற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் அரிகரன், கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த ரட்னகுமார் ஆகியோர் காயங்களுக்குள்ளாகினர்.
இத்தாக்குலை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், ஆனோல்ட், சுகிர்தன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் ஆனைமுகன் ஆகியோர் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே இந்த நிகழ்வால் இணைத்தலைவர் விக்னேஸ்வரன் தாம் நிற்க விருப்பவில்லையெனக் கூறிவிட்டு வெளியேறியிருந்த நிலையில் ஏனைய கூட்டமைப்பு பிரதிநிதிகளும் கூட்டத்தை குழப்பிக் கொண்டு வெளியேறினர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய இணைத்தலைவர் விக்னேஸ்வரன் எனது கருத்துக்களை பிரஸ்தாபித்த போது இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் செவிமடுத்ததை போன்று அவரது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செவிமடுக்குமாறு கூட்டமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad