முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கையொப்பங்களை போலியான முறையில் பயன்படுத்தி ஆவணம் ஒன்றை தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார்.
இதன்படி விசாரணை நடத்திய இரகசிய பொலிஸார் இன்று காலை திஸ்ஸ அத்தநாயக்கவை கைது செய்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.