ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்ல தயராக இருப்பதாக, தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாலிபான் தீவிரவாதிகள் என்னை மனிதாபிமானமாக நடத்தினர். உணவு கிடைக்காத சில நேரங்களில் என்னுடன் சேர்ந்து தாலிபான்களும் பட்டினி கிடந்தனர். எனினும் தாலிபான்கள் என்னை சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். என்னிடம் மிகுந்த அன்புடன் இருந்தார்கள். எனக்கு சின்ன சின்ன வியாதிகள் வரும். அவர்கள் மிகுந்த அக்கறையுடன் அதனை கவனிப்பார்கள்.
மத்திய அரசின் பெரும் முயற்சியால் நான் விடுவிக்கப்பட்டேன். விடுதலை செய்யப்பட்டதற்கு தாலிபான்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. ஆனால் இந்திய அரசு 20 லட்சம் டாலர் அளித்துள்ளதாகவும், விரைவில் விடுதலை செய்துவிடுவதாகவும் தாலிபான்கள் என்னிடம் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்தால் சுட்டுக்கொன்றுவிடுதாக மிரட்டினர். ஆனால் அங்கு செல்ல தயராக இருக்கிறேன். தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஆப்கன் அரசும், தாலிபான்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.