சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இவர்கள் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரை கடத்தி பிணையத் தொகை வசூலித்து வருகின்றன. சிலரை தலை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் லிபியாவில் பணிபுரியும் 4 இந்திய ஆசிரியர்கள் நேற்று திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே நகரில் தங்கி ஆசிரியராக பணி புரிந்தவர்கள்.
இவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் தற்போது லட்சுமிகாந்த், விஜயகுமார் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பத்திரமாக அங்குள்ள சிர்டே பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏனைய 2 பேரை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.