பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக வரும் அகதிகள், சில சமயங்களில் கடலில் தத்தளித்து உயிரையும் விடுகின்றனர். உயிர்பிழைத்தவர்களை மீட்டு சொந்த நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில், சுமார் 400 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த படகு லிபியாவில் இருந்து 21 மைல்கள் தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் தத்தளிப்பதாக இத்தாலி கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடற்படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
படகில் வந்தவர்களில் சுமார் 40 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கையை உறுதிப்படுத்தப்படவில்லை.