தன்னோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வலியுறுத்தி உள்ளது அதிமுக தலைமை. இது அப்பட்டமான ஜனநாயகப்படுகொலை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகைதந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மாற்றுக் கொள்கை, கூட்டுத் தலைமை, கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி தேர்தலைச் சந்திக்கிறது. இன்று அதிமுக வேட்பாளர் பட்டியலில், தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 227 இடங்கள் போக வெறும் 7 இடங்களை மட்டுமே கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது. கூட்டணி வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வைத்துள்ளது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும்.
அதிமுக, திமுகவிற்கு மாற்றாக ஒரு வலுவான அணியாக தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி திகழ்கிறது. இந்த அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்த அணியில் தமிழ் மாநில காங்கிரசும் இணைய வேண்டும் என மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம். திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன் அதிமுக ஆட்சியில் 2.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது நமது அடிப்படைப் பொருளாதாரத்தையே தகர்க்கக்கூடியது.
சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அதிமுகவும், திமுகவும் பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கிறது. கருப்புப் பணம் கப்பலிலும், கண்டெய்னரிலும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டேன். அங்கு எப்படியெல்லாம் பணம் மற்றும் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது என்பது கண்கூடாகப் பார்த்தேன். அங்கு மதியம் இரண்டு மணிக்குப் பிறகு நடந்த வாக்குப் பதிவு குறித்த வீடோவை தேர்தல் ஆணையம் பரிசீலித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
முழுக்க முழுக்க தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாகவே செயல்படுகிறது என்பதுதான் உண்மை. இதை முறியடித்து தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றார்.