குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த 03 ஆம் திகதி குறித்த சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டமையுடன் சமூக வலைத்தளத்திலும் சிறுமியின் புகைப்படத்தினை பிரசுரித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அச்சிறுமியை வவுனியா - நாகர், இலுப்பைக்குளம் பகுதியில் இளைஞருடன் தங்கிருந்ததை அவதானித்த அயலவர்கள் அப்பகுதி கிராம சேவையாளருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கிராம சேவையாளருடன் பொதுமக்கள், பொலிஸார், சிவில் அமைப்புக்கள், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து சிறுமியை மீட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தானும் அவ் இளைஞனும் தொலைபேசியூடாக காதலித்ததாகவும் அவருடன் வாழ ஆசைப்பட்டு தான் இங்கே வந்ததாகவும் தெரிவித்தார். ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சிறுமி பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் |