
- மோகன்
- பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த மே 16-ஆம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக உள்ளனர்.
"காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரை தமிழ்நாடு அமைச்சரவையில் இணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்," என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினரின் ஆதரவை தவெக பெறக்கூடாது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்திருந்தார்.
கடந்த திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "தவெக ஆட்சி அமைப்பதற்காக மட்டும் தான் ஆதரவு நல்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் ஆட்சி, மறு தேர்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஏற்கெனவே கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்ட சூழலில் இரண்டே இடங்களில் விசிகவால் ஆட்சி அமையாமல் போய்விட்டது என்கிற குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆதரவு தெரிவிக்கிறோம் எனக் கூறிவிட்டேன். திமுக கூட்டணியில் தொடர்கிறோம், வெளியிலிருந்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம்." என்றார்.
அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு - ஆதவ் அர்ஜுனா

இந்தச் சூழலில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார். சமூக நீதி அடிப்படையில் இயங்கக்கூடிய தலைவர்களும் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய வேண்டும். காங்கிரஸ் அமைச்சரவையில் இணைய வேண்டும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார். வெளியில் இருந்து ஆதரவு என்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். அமைச்சரவையில் பங்கு பெற விசிகவை அழைக்கிறோம். முதலமைச்சரின் விருப்பமும் அது தான். முஸ்லிம் லீக் கட்சியினரும் இடம்பெற வேண்டும் என அழைக்கிறோம். இடதுசாரி கட்சிகளும் வர வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். குடும்பமாக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்." என்று கூறினார்.