புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2012

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் அரை இறுதிக்கு நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டங்களில் இன்று இந்தியா-தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள்.

இலங்கையில் நடைபெற்று வரும் நான்காவது இருபதுக்கு20 உலக கிண்ண தொடர் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

சூப்பர்-8 சுற்றில் இ பிரிவில் இடம்பெற்ற அணிகளில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் எப் பிரிவில் இடம் பெற்றுள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகளல் இரு அணிகளில் அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு இன்று பலபரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.



அந்தவகையில சூப்பர்-8' சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. 2ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

அவுஸ்திரேலிய அணி தனது 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான், இந்தியா அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகிக்கிறது. இந்தியாவை விட பாகிஸ்தான் அணி ரன் ரேட்டில் சற்று அதிகமாக இருப்பதால் 2-வது இடமும், இந்தியா 3-வது இடமும் வகிக்கிறது. தென்னாபிரிக்கா அணி 2 ஆட்டத்திலும் தோல்வி கண்டு புள்ளி கணக்கை தொடங்கவில்லை.

இந்திய அணி தனது இறுதி சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்னாபிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை கட்டாயம் வீழ்த்த வேண்டும். அத்துடன் முந்தைய ஆட்டத்தின் (அவுஸ்திரேலியா-பாகிஸ்தான்) முடிவை பொறுத்து இந்திய அணி தனது ஆட்ட வியூகத்தை அமைத்து கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கிறது.


இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் நெருக்கடிக்கு இடம் அளிக்காமல் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இந்திய அணியின் தொடக்கம் இதுவரை சரியாக அமையவில்லை. அதனை சரி செய்ய வேண்டியது அணியின் கடமையாகும். சகீர்கான் பந்து வீச்சு எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அமையவில்லை. சுழற்பந்து வீச்சு தான் இந்திய அணிக்கு பலமாகும். தொடர்ந்து நல்ல ஆட்டத்தை அளித்து வரும் விராட்கோக்லியின் அதிரடியும் தொடர வேண்டியது முக்கியமானதாகும்.

தென்னாபிரிக்க அணியை பொறுத்தமட்டில் துடுப்பாட்டத்தில் டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கலிஸ் ஆட்டம் எதிர்பார்த்தபடி இல்லை. பந்து வீச்சில் ஸ்டெயின், மோர்னே மோர்கல் ஆகியோர் கலக்கி
வருகிறார்கள். அவர்களின் அபார பந்து வீச்சு இந்திய அணிக்கு கடும் சிம்மசொப்பணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்வா-சாவா? என்ற நிலையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் முழு திறனையும் வெளிப்படுத்தும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பில் நடைபெறும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக வெற்றி பெற்றதோடு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது. இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சும் துடுப்பாட்டமும் சிறப்பாக காணப்படுகின்றது. அதேவேளை கடந்து இரு போட்டிகளில் பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் உமர்குல் கலக்கி வருகின்றார். இவருடைய பங்களிப்பு அணிக்கு முக்கியமான ஒன்றாகும்.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. இவ்வணியில் சேன்வொட்சன் பந்து வீச்சு துடுப்பாட்டம் என தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். எனவே அவுஸ்திரேலிய அணிக்கு இவர் முதுகெலும்பு போல் இருக்கின்றார்.


எப் பிரிவில் ஹசூப்பர்-8 சுற்றின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. இன்னும் எந்த அணியும் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடவில்லை. 4 அணிகளும் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளை தோற்கடித்து 4 புள்ளிகளுடன் உள்ள அவுஸ்திரேலிய அணி ரன் ரேட்டிலும் (+1.712) வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் மோசமான தோல்வியை சந்திக்காமல் இருந்தாலே அவுஸ்திரேலியா அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும்.

ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள இந்திய அணி இறுதி லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவை கட்டாயம் வீழ்த்த வேண்டும். அதே சமயத்தில் பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்திக்க வேண்டும். அப்படி நடந்தால் அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் ரன்ரேட் பிரச்சினை எதுவுமின்றி எளிதில் அரை இறுதிக்குள் நுழைந்து விடும்.

இந்தியா, தென்னாபிரிக்காவை தோற்கடித்தும், அதேசமயத்தில் பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியாவை வெல்லும் பட்சத்தில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகிக்கும். ரன் ரேட்டில் வலுவாக உள்ள அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறும். இந்தியா, பாகிஸ்தான் அணிகளில் ரன் ரேட் அதிகமாக இருக்கும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். எனவே இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.

இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் அரை இறுதி வாய்ப்பு சிறிய அளவில் உள்ளது. தென் னாபிரிக்காவிடம், இந்திய அணி தோற்றும், அவுஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை வீழ்த்தினாலும், அவுஸ்திரேலிய அணி 3 வெற்றியுடன் கம்பீரமாக அரை இறுதிக்கு முன்னேறும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் அதிகம் உள்ள ஒரு அணி அரை இறுதிக்குள் நுழையும்.

பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியாவை வென்று, இந்திய அணி தென்னாபிரிக்காவிடம் தோற்றால் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

ad

ad