புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2013



ஜெனீவாவில் இந்திய அரசு மன்னிக்க முடியாத துரோகம்: மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது: வைகோ
 

ஜெனீவாவில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். மத்திய
அரசு நெருப்போடு விளையாடுகிறது. விபரீதங்களை அறுவடை செய்யப்போகிறது என்று எச்சரிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் 17.03.2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 
சிங்களக் கொலைபாதக அரசு ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த, மனித உரிமை கவுன்சில் தீர்மானிக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் இமயமாய் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் இலட்சோப இலட்ச மாணவர்கள் அறவழி போர்க்கொடி உயர்த்தி, மவுனப் புரட்சி நடத்தும் இன்றைய சூழலில், இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15 ஆம் தேதி மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து, அக்கிரமமான அறிக்கை தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணித்துள்ளது.
இந்த அறிக்கை சிங்கள இராஜபக்சே அரசு தயாரித்துத் தந்த அறிக்கையாகவே தோன்றுகிறது. தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதானே இந்திய அரசு. தமிழர்களின் மீள் குடியேற்றமும் மறுவாழ்வும் வரவேற்கத்தக்க விதத்தில் சிங்கள அரசு நடத்தியுள்ளதாகவும், இராஜபக்சே அரசு அமைத்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், மனித உரிமை மீறல் குறித்த புகார்களை சிங்கள அரசே முறையாக விசாரிக்கும் என்று நம்புவதாகவும், வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடத்தி, இலங்கை சுமூகமான வெற்றிகாண வேண்டுமென்று வாழ்த்துவதாகவும், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு அறிக்கை தந்து, கொலைபாதக சிங்கள அரசுக்கு பல்லாக்குத் தூக்குகிற ஈனச் செயலைச் செய்துள்ளது.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக செயல்பட்டது என்பதற்கு, 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு செய்த துரோகங்களை ஆணித்தரமான ஆதாரங்களைக் காரணமாகச் சொல்லி வந்துள்ளேன்.
சிங்கள அரசு இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பைச் செய்து வருகிறது. கேரள மாநில கடற்கரையை ஒட்டிய கடலில், இந்திய அதிகார எல்லையை அடுத்துள்ள கடல் பகுதியில், இத்தாலிய வர்த்தகக் கப்பலில் இருந்த கடற்படையினர், கடல் கொள்ளைக்காரர்கள் என்று எண்ணியதால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அத்தாக்குதலில் இரண்டு மீனவர்கள் உயிர் இழந்தனர். இதில் கைது செய்யப்பட்ட இத்தாலியக் கடற்படை வீரர்கள் இருவர், இந்திய நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தின்படி, இத்தாலியிலிருந்து திருப்பி அனுப்பப்படவில்லை என்பதற்காக, இத்தாலியோடு இராஜ்ய உறவுகளை முறிப்போம் என்று இந்திய அரசு எச்சரித்தது. இத்தாலியத் தூதர் டேனியல் மன்சினி இந்தியாவிலிருந்து வெளியேறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், அவர் வெளியேறி விடாமல் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுக்காவலை இந்திய அரசு பலப்படுத்தியுள்ளது.
ஆனால், தமிழக மீனவர்கள் 578 பேரை, இதுவரை பல நேரங்களில் இந்திய கடல் எல்லைக்குள்ளேயே வந்து சுட்டுப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையை இயக்கும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு எந்த எச்சரிக்கையும் என்றும் செய்தது கிடையாது. அதற்கு மாறாக, அக்கொலைகார அரசை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு ஏற்கவில்லையா? என்ற கேள்வி தமிழர் மனங்களில் பூதாகாரமாக எழுந்துள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குழி பறிக்கும் வேலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது. வினையை விதைத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கான விலையை காங்கிரÞ கட்சியும், அதன் தலைமையிலான மத்திய அரசும் கொடுக்க நேரிடும்.
மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது. விபரீதங்களை அறுவடை செய்யப்போகிறது என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

ad

ad