என்றோ ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்ஜியம் உருவாகலாம்!- கலாநிதி தயான் ஜயதிலக
இலங்கையை சர்வதேச விசாரணையென்ற தூக்குமேடையில் நிறுத்தும் மாநாடாகவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாடு அமையப் போகின்றது. எனவே டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடலாகாது என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளhர்.
அரசாங்கம் இப்போதிருந்தே இதற்கு முகம் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக தயாராக வேண்டுமென்றும் இல்லாவிட்டால் எப்போதாவது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்ஜியம் உருவாகலாம் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
இது தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக மேலும் தெரிவித்திருப்பதாவது,
பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடவோ அல்லது அதனை கணக்கிலெடுக்காது இருக்கவோ கூடாது.
அவரது கருத்தில் நவநீதம்பிள்ளையை இணைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான முழு ஆதரவையும் பிரிட்டிஷ் வழங்கும் என்றும் கமரூன் தெரிவித்துள்ளார்.
2012, 2013 ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையைப் போன்று 2014 ஆம் ஆண்டு அமையப் போவதில்லை. அது பயங்கரமானதாக அமையும்.
கடந்த ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளானது 2016ஆம் ஆண்டில் முன்வைக்கப்படவுள்ள எம்மை சர்வதேச விசாரணை என்ற தூக்கு மேடையில் நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகள் ஆகும்.
இலங்கை அரசாங்கம் இதற்கு எதிராக தலைகீழாக நின்று அடம் பிடித்தாலும் கருத்துக்களை முன்வைத்தாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை. மாறாக ஜெனீவாவுக்கே வெற்றி கிடைக்கும். 2012, 2013 இல் வாக்கெடுப்பு தோல்வி கண்டது அப்படியானால் 2014 இல் எவ்வாறு வெல்லமுடியுமென சிலர் கேட்கலாம்.ஆணைக்குழுவில் எமது நட்பு நாடுகள் இருக்கின்றனவே எனக் கூறலாம். அவ்வாறு அங்கம் வகித்த நிலையிலேயே 2012இல் தோல்வி கண்டோம்.
இம் முயற்சியானது ஜனாதிபதியினதும் மக்களினதும் கண்களில் மண்ணை தூவுவது போலானதாகும்.இவ் ஆணைக்குழுவில் மீண்டும் எமது நட்பு நாடுகளான 6 நாடுகளே அங்கம் வகிக்கின்றன.அதாவது ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், அல்ஜீரியா, சவூதி அரேபியா அந் நாடுகளாகும்.இந் நாடுகள் இருப்பதால் வாக்கெடுப்பில் எம்மால் வெல்ல முடியாது.
2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் அரசு டேவிட் மிலிபேண்ட் தலைமையில் நவநீதம்பிள்ளையின் ஒத்துழைப்புடன் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அதன் போது அக் கூட்டணிக்கு 12 வாக்குகளே கிடைத்தன. இலங்கைக்கு 29 வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் நான்கு வருடங்களுக்கு பிறகு என்ன நடந்துள்ளது.
இலங்கைக்கு நேரடியாகவே விஜயம் செய்த கமரூன் ஜெனீவாவில் இலங்கையை தோல்வியடையச் செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளார். இவ்வாறான நிலைமைக்கு இலங்கை எப்படித் தள்ளப்பட்டது.
எமக்கு நட்பு நாடுகள் உள்ளன எனக் கூறுவது வெறும் எண்ணிக்கை கணக்காகும். கமரூனின் அச்சுறுத்தல் செயற்படத் தொடங்கினால் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
இம் மாநாட்டில் இலங்கை கலந்துகொள்ளாவிட்டாலும் தனித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும். அத் தீர்மானம் எவ்வாறு அமையும் என்பதை ஏற்கனவே தருஷ்மன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் தூக்கு மேடைக்கான சர்வதேச விசாரணை என்ற தீர்ப்பாகும்.
இத் தீர்ப்புக்கு அமைய உலகின் பலம் பொருந்திய நாடுகள் தத்தமது பாராளுமன்றங்களில் பிரேரணைகளை நிறைவேற்றி பல்வேறுவிதமான பொருளாதார தடைகளை விதிக்க ஆரம்பிக்கும்.
இதனால் மக்கள் கஷ்டங்களுக்கு தள்ளப்படுவார்கள். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும். அத்தோடு பொருளாதாரத் தடைகளால் நாட்டு மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் தலைகீழாக மாறும்.
அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, 2009ஆம் ஆண்டு வெற்றி 2012, 2013 ஆண்டுகளில் பெற்ற தோல்விகளையும் பாடமாகக் கொள்ள வேண்டும்.எதிர்வரும் 4 மாதங்களில் ஜெனீவா போராட்டத்திற்கு தீர்க்கமான ராஜதந்திர ரீதியில் புத்திக் கூர்மையுடன் காய் நகர்த்தல்களை அரசாங்கம் நகர்த்த தயாராக வேண்டும்.இது தவிர்க்க முடியாத சவாலாகும்.
இந்த சர்வதேச பொறி முறையால் நாம் பெற்ற வெற்றிக்கும் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படும்.இதனால் எப்போதாவது ஒரு நாள் வடக்கில் தனி நாடு உருவாவதற்கு தேவையான சர்வதேச மற்றும் தெற்காசிய வலயத்தின் எழுத்து மூலமான நிபந்தனைகள் தயாராகும் நிலை உருவாகும்.
பொதுநலவாய மாநாட்டில் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பிலும் நாட்டுத் தலைவர் மற்றும் வடபகுதி தொடர்பில் வெளிக்காட்டிய செய்திகள் சாதகமற்றதாகவே காணப்பட்டன. இது இலங்கையின் எதிராளிகளுக்கு விருந்தாக அமைந்தது. கமரூனின் யாழ். விஜயம் தமிழ் இனவாத சக்திகளின் பரம்பலுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.