புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

டிசம்பர் மாத ராசிபலன்கள்

மேஷம்


இந்த மாதம் கோட்சார கிரக அமைப்பு உங்களுக்கு மிகமிக சாதகமாக இருப்பதால், உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நீங்கள் விரும்பியபடியே நிறைவேறும். சில நேரங்களில் சில தடைகளும் குறுக்கீடுகளும் தென்பட்டாலும், அவற்றையெல்லாம் கடந்து உங்கள் வெற்றிப்பயணம் தொடரும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களும்
பிரச்சினைகளும் இந்த மாதத் தொடக்கத்திலேயே விலகியோடிவிடும். நீண்டகாலமாக பார்க்க முடியாத நெருங்கிப் பழகியவர்களை விரும்பிப் பார்க்கும் அமைப்பு ஏற்படும். அதனால் ஆனந்தமும் பரவசமும் அளவிடமுடியாத மனநிறைவும் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை தீவிர ஆலோசனை செய்து செயல்படுத்தலாம். அதற்கு முக்கியமானவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களுக்கோ- உங்களைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ இருந்த பிணி பீடைகளும் விலகி பூரண ஆரோக்கியமும் சுகமும் உண்டாகும்.

ரிஷபம்


இந்த மாதம் சொந்தம் சுற்றமிடையே பந்தபாசம் பொங்கிவழியும்- பொங்கிப்பரவும். குடும்பத்தில் பெற்றவர்கள்- பிள்ளைகள் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி, மனஒற்றுமையும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப்போகும் அனுசரணையும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிலவிய நஷ்டங்களும் சிக்கல்களும் பிரச்சினைகளும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். தொழில் சீர்திருத்தமும் புதிய முயற்சியும் கைகொடுக்கும். பொருளாதாரத்திலும் இதற்கு முன்பு நிலவிய நெருக்கடி நிலைகள் மாறி சரளமான பணப்புழக்கம் காணப்படும். வரவு- செலவுகள் திட்டமிட்டபடி செயல்பட்டு வாக்குநாணயத் தைக் காப்பாற்றலாம். அதேபோல் உங்களுக்கு வரவேண்டியது வந்துசேரும். கொடுக்க வேண்டியதும் குறிப்பிட்டபடி கொடுக்கப்படும். சிலர் வெளிநாட்டு வர்த்தகத்தொடர்பு மேற்கொள்ளலாம். அல்லது வேலைக்குப் போகலாம். தாய்வழி உறவினர்களின் உதவியும் ஒத்துழைப்பும் எதிர்பார்த்தபடி அமையும். திருமணமாக வேண்டியவர்களுக்குத் திருமணம் கூடும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும்.

மிதுனம்


இந்த மாத முற்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு உங்களை திசை திருப்பும். அதனால் கையிருப்பும் செலவாகி, வெளியில் கடன் வாங்கி சில காரியங்களை நிறைவேற்றவேண்டிய கட்டாயமும் உண்டாகும். அதனால் சில சமயம் உங்களையறியாமலேயே டென்ஷன் ஏற்படும். அந்தமாதிரி சந்தர்ப்பங்களில் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தினர் அல்லது பெரியோர்கள் உங்களுக்கு சொல்லும் அறிவுரைகள் உங்களைக் குத்திக்காட்டுவதுபோல உணர்வீர்கள். ஆனால் அதற்காக கோபமோ வருத்தமோ அடையக்கூடாது. "அழஅழச் சொல்லுகிறவர்கள் வாழ்வதற்கு வழிசொல்லும் நல்லவர்கள்; சிரிக்கச் சிரிக்க சொல்லுகிறவர்கள் சீரழிக்க வைப்பவர்கள்' என்பதைப் புரிந்து கொண்டால் உங்களுக்கு உண்மை விளங்கும்! வெளியூர் பயணங்களில் கவனம் தேவைப்படும். முன்னெச்சரிக்கை அவசியம்! சம்பந்தக்காரர்கள் வகையில் சிலசமயம் சந்தோஷமும், சிலசமயம் சங்கடங்களும் தோன்றலாம். மாதப் பிற்பகுதியிலிருந்து எல்லாம் உங்களுக்கு அனுகூலமாக அமையும்.

கடகம்


மாதம் முழுவதுமே உங்களுக்கு அனுகூலமாகவும் ஆனந்தமாகவும் அமையும். சில நேரங்களில் அதிக உழைப்பாலும் ஓய்வில்லாத வேலையாலும் "டென்ஷன்' ஏற்பட்டாலும், மறுநேரம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை தாரகமந்திரமாகக் கருதி செயல்படுவதால் உற்சாகமும் தெம்பும் உண்டாகிவிடும். வாழ்க்கைத் துணையின் ஆதரவாலும் உதவியாலும் பிரச்சினைகளை எளிதாக சமாளித்துவிடலாம். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கும் சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கும் இந்த மாதம் இனிய மாதமாக அமையும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரும். அது உங்களுடைய எதிர்கால இனிய வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையும். நண்பர்கள், சகோதரர்கள் வகையிலும் நல்லது நடக்கும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக எல்.ஐ.ஸி பாலிஸி அல்லது பேங்க் டிபாசிட் போடும் திட்டம் செயல்படும்.

சிம்மம்


இந்த மாதம் உங்களுடைய செயல் களிலும் முயற்சிகளிலும் தடையில்லை- தாதமில்லையென்றாலும் வெளியார்களின் விமர்சனங்கள் வேண்டாதவையாக அமையும்.அது உங்களுடைய முன்னேற்றத்துக்கு தடைக்கற்களாகத் தோன்றினாலும்- உங்களுக்கு உற்சாகமூட்டும் அல்லது வைராக்கியத்தை உண்டாக்கும் முன்னறிவிப்பாக எடுத்துக்கொள்ளலாம். தொழில், உத்தியோகத்தில் இன்னும் தீவிர கவனம் காட்டிமுன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளலாம். பொருளாதாரத்தில் தேக்க நிலையும் தொய்வு நிலையும் நீக்கமாகி, ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றி ஊக்கமாக சாதனை படைக்கலாம். பேரும் புகழும் பெருமையும் அடையலாம். என்றாலும் உதவியாளர்கள் செயல்பாட்டில் மனநிறைவு ஏற்படாமல், எல்லா வேலைகளையும் நீங்களே நேரடி கவனம் செலுத்தி சாதித்து நிறைவு பெறுவீர்கள். குடும்பத்தில் இனி வைத்தியச் செலவு இருக்காது. முழு ஆரோக்கியமும் பூரணசுகமும் நிலவும். பொருளாதாரம் தேவைக்கேற்ற வகையில் கிடைத்து உங்களை சந்தோஷப்படுத்தும்.

கன்னி


ஏழரைச் சனி எப்போது நல்லது செய்யும்- எப்போது கெடுதலைச் செய்யும் என்று தீர்மானிக்க முடியாதபடி- உங்களுக்கு குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும்! நல்ல காரியங்களில் சிலசமயம் கெடுதல்களும் தெரியும். கெட்டதிலும் சிலசமயம் நல்லது நடக்கும். சனி ஏற்றத்தையும் தருவார்; இறக்கத்தையும் தருவார்; மாற்றத்தையும் தருவார். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால்- சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடந்தால் மட்டுமே தாழ்ச்சியும் வீழ்ச்சியும் உண்டாகும். மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இடப்பெயர்ச்சி, தொழில் மந்தம், தொழில் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். அப்போது வருவதை விரும்பி ஏற்றுக்கொண்டால்- மாற்றம் பின்னர் ஏற்றமாக அமையும். நெல்லிக்கனி முதலில் துவர்க்கும்; பின்னர் இனிக்கும் என்பதுபோல! பொருளாதாரம் சரளமாகப் புரண்டாலும் கடன் ஆதிக்கத்திலிருந்து பூரணமாக விடுபடாத சூழ்நிலை இருக்கத்தான் செய்யும்.

துலாம்


துலா ராசிக்கு ஜென்மச் சனி நடக்கிறது. அதனால் குடும்பத்திலும் சரி; உடன்பிறந்த வர்கள் வகையிலும் சரி- ஏதாவது பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கும். அதிலும் பொருளாதாரப் பற்றாக்குறைதான் உங்கள் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம்! அத்துடன் எக்குத்தப்பாக யாரிடமோ கந்து வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி என்று வாங்கி வாங்கி- ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைத்ததால், இன்று கடன் சுமை தலைக்குமேல் வெள்ளம்போல சுமையாகிவிட்டது; பாரமாகிவிட்டது. இதில் தப்பிக்க முடியுமா முடியாதா என்று குழப்பம். துலா ராசியை குரு பார்ப்பதால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும்- இடைவழியில் உள்ள செடியைப் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி உயிர்பிழைப்பது போல- ஏதாவது ஒரு வழியில் குருவருளும் திருவருளும் உங்களைக் காப்பாற்றிவிடும். இருந்தாலும் வழக்குகள் வாய்தா வாய்தா என்று தள்ளிப்போவதுபோல- கடனை அடைப்பது எப்போது என்பது தெரியாமல் தவிப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் எல்லாம் நன்றாக இருந்தாலும், மனசங்கடமும் சலனமும்தான் உங்கள் மகிழ்ச்சிக்கு எதிரி!

விருச்சிகம்


விருச்சிக ராசிக்கு 8-ல் குருவும் 12-ல் சனியும் இருப்பது "சாண் ஏற முழம் வழுக்க' என்ற கதையாக சறுக்குமர விளையாட்டு நடக்கிறது. வரவுக்குமேல் செலவும் உங்களை திக்குமுக்காடச் செய்கிறது. பொதுவாக இறைக்கிற கிணறுதான் ஊறும் என்பது பழமொழி! ஆனால் உங்கள் நிலை ஊற்று வற்றிய கிணறு என்பதால்- ஊற்று ஊறும்வரை காத்திருந்து ஒவ்வொரு வாளியாக இறைக்க  வேண்டியிருக்கிறது. சமயத்தில் அடித்தண்ணீர் மணலும் கலங்கலுமாக வருவது மாதிரி, கடன் வாங்கியும் பட்டினி- கல்யாணம் பண்ணியும்பிரம்மச்சாரி என்ற நிலையில் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை. சிலசமயம் கோட்சார கிரக பாதிப்பால்- ஒரு கடனை அடைக்க வாங்கிய கடன் வேறொருபிரச்சினையில் செலவாகி, பழைய கடனும் அடைபடாமல் புதுக்கடனும் உருவாகிவிடுகிறது. இதற்குமுன் பொருளாதாரத்திலும் பிரச்சினை, குடும்ப உறவுமுறையிலும் பிரச்சினை என்று மத்தளத்துக்கு இருபக்கம் இடியென்று இருந்தது. அந்தநிலை இப்போது குரு பார்ப்பதன் பலனாக மாறி- உரலுக்கு ஒரு பக்கம் அடி என்பது மாதிரி, குடும்ப உறவில் அன்யோன்யம், பாசம், நேசம் நிரம்பி, பொருளாதாரப் பற்றாக்குறையோடு நின்றுவிட்டது. அதை நீங்கள் சுலபமாக சமாளித்துவிடலாம்.

தனுசு


தனுசு ராசிக்கு 7-ல் குரு பலம்பெற்று ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 11-ல் சனியும் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து இருவரும் தனுசு ராசியைப் பார்ப்பதால்- உங்களுக்கு "லைன் கிளியர்' ஆகி விட்டது. அமைச்சர்கள் வரும் வழியில் பாதுகாப்பு போலீஸ் நின்று போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கிளியராக்கி' விடுவதுபோல உங்கள் பிரச்சினைகள் எளிதாகிவிடும். கௌரவம், திறமை, புகழ், செல்வாக்கு ஆகியவற்றுக்குக் குறைவில்லை. சுயதொழில் செய்கிறவர்களுக்கு முன்னேற்றமும் லாபமும் குறையாமல் நிறைவாக இருக்கும். அதேசமயம் அடிமை உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு- 8-ஆம் இடத்தை 11-ஆம் இடத்து சனி பார்ப்பதால், சலுகைகள் குறைந்து சந்தோஷக் குறைவு ஏற்படலாம். மதிப்பு, மரியாதை, வேலையில் பாராட்டு இருந்தாலும் ஊதிய உயர்வுக்கு இடமில்லாத கவலை சிலருக்கு விரக்தியை உண்டாக்கலாம். அதற்காக வேலையை விட்டுவிட வேண்டாம். ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு வாடியிருக்குமாம் கொக்கு என்பதுபோல காத்திருக்கவும்.

மகரம்


மகர ராசிநாதன் சனி 10-ல் உச்சம். தொழில், வாழ்க்கை, செல்வாக்கு ஆகியவற்றுக்குக் குறைவில்லை. அதேசமயம் 3, 12-க்குடைய குரு 6-ல் மறைவு என்பதாலும் 10-ல் ராகு இருப்பதாலும், எந்த வேலையைத் தொட்டாலும் நினைத்தோம் முடித்தோம் என்ற நிலையை அடையமுடியாது. ஒருசிறு துரும்பை அசைப்பதாக இருந்தாலும் ஒரு பெரிய கடப்பாறை தேவை என்பதுபோல கடின முயற்சியாக இருக்கும். சிலசமயம் மலையைக் கிள்ளி எலியைப் பிடித்த கதைதான்! மனைவி- தொழில் இருவகையிலும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. வரவு- செலவுகளில் தேக்கமிருக்காது. எதிர்பார்த்தது வரும்- கொடுக்க வேண்டியது அடைபடும். மிச்சப்படுத்த முடியாது. கையிருப்பு தீர்ந்ததும், அடுத்து என்ன செய்வது என்று கவலைப்படும்போது புதுவரவு வரும். கணிசமாக வந்ததும் தடையின்றி தாமதமின்றி, நினைத்தபடி- திட்டமிட்டபடி செயல்படலாம். உங்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கியம் மிகத் தெளிவாக இருக்கும்; பயமில்லை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான காலம்! 2, 11-க்குடைய குரு 5-ல் நின்று கும்ப ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களையும் பார்க்கிறார். எனவே குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். தகப்பனார் அல்லது தகப்பனார் வகை உறவினர்களின் மூலமாக நன்மைகள் உண்டாகும். அன்னிய நண்பர்கள் வகையிலும் உதவி, ஒத்தாசை, ஆதரவு எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் ஒருசில நன்மைகளையும் லாபங்களையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து நடக்காமல் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். அது ஒரு நன்மைக்குதான். இனி அதுவரும்- நிச்சயம் நடக்கும். (வரும்- ஆனா வராது என்ற சந்தேகம் இனி இல்லை). எதிர்பாராத நன்மைக்குத்தான் அதிர்ஷ்டம் என்று பெயர். உங்களுக்கு இப்போது அதிர்ஷ்ட வாய்ப்புகள் வெயிட்டிங் லிஸ்டில் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றாக- வரிசையாக அதிர்ஷ்டமும் யோகமும் வந்து அரவணைக்கும்! வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மீனம்


மீன ராசிக்கு அட்டமச் சனியும் அட்டம ராகுவும் கண்ணாமூச்சி விளையாட்டு காண்பிக்கின்றன. சடுகுடு விளையாடுகின்றன. "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்' என்று ஒரு புலவர் பாடினார். 

அதுபோல ஏதேதோ எண்ணுகிறீர்கள்- என்னென்னவோ நடக்கிறது. அதுதான் அட்டமச் சனி படுத்தும்பாடு. ஆனால் அவர்களை குரு 4-ல் நின்று பார்ப்பதோடு 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக் காகத்தான். இந்த நேரம் அந்த உண்மை விளங்காவிட்டாலும், பின்னால் அது உங்களுக்குப் புலப்படும். அதுதான் தெய்வரகசியம். கிரக ரகசியம்! தொழில், வாழ்க்கை இரண்டும் தொய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும். அப்புறம் ஏன் கவலைப்பட வேண்டும்? முன்னதாக பயணத்துக்கு முன்பதிவு செய்தபிறகு, வரிசையில் காத்திருக்கும் கூட்டத்தைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

ad

ad