புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014


இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்: இந்திய அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
இலங்கை வாழ் இஸ்லாமிய சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சிங்கள இனத்தைச் சேர்ந்த பௌத்த துறவிகள் முஸ்லிம் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்லாமியர்களின் குடிசைகள் மற்றும் கடைகளைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
மசூதிகள் மீதும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிங்கள, பௌத்த ஆதிக்க வெறியர்களின் இந்தத் தாக்குதலில் இதுவரை மூன்று இசுலாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.“பொதுபலசேனா’ என்னும் அமைப்பைச் சேர்ந்த புத்தத் துறவிகளே இந்தக் கொடூரமான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தத் துறவி ஒருவரின் ஓட்டுநர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இத்தகைய வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானையும் தீயில் எரித்து வெறியாட்டம் ஆடியுள்ளனர். சிங்கள,பௌத்த இனவெறிக் கும்பலின் காட்டுமிராண்டித் தனமான இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அயல்நாட்டுச் சுற்றுப் பயணத்திலிருக்கும் ராஜபக்ச வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனை பௌத்த துறவிகளுக்கான எச்சரிக்கையாக புரிந்துகொள்ள இயலாது இஸ்லாமியர்களுக்கு எதிரான எச்சரிக்கையாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.
எனவே, இந்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு சிங்கள அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு பௌத்த துறவிகளின் இந்த வெறியாட்டமே ஒரு சாட்சியமாக உள்ளது.
எனவே, இலங்கையில் வாழும் தமிழர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு இந்திய அரசு உரிய வழிவகை காண வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad