தமிழர்களைப் பாதுகாக்க சர்வதேசம் தவறிவிட்டது
இறுதிக் கட்டப்போரில் தமிழ் மக்கள் எதிர் கொண்ட நெருக்கடிகளைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டதாக இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்பு ஆலோசகர் அடமா தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் நேற்றுமுன்திம் செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு முன்பாகவே பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நிபுணர் குழுவொன்றை அமைத்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலுவான தார்மீக பலத்தை வெளிப்படுத்தினார். ஏனைய நாடுகளில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
போர் நடவடிக்கைகளின் போது மனிதவுரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். பாரிய ஒடுக்குமுறைகளை சந்திக்கும் மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா உறுப்பு நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். எமது அனுபவத்தின்படி இனப்படுகொலை என்பது உடனடியாக நடைபெறக்கூடிய நிகழ்வு அல்ல. அதற்கான செயல்முறைகளை நடைமுறைப்படுத்த காலம், திட்டமிடல் மற்றும் வளங்கள் அவசியம்.
எனவே அது தொடர்பாக உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கைகளை உடுப்பதன் மூலம் இனப்படுகொலைகளை எந்தக் கட்டத்திலும் தடுக்கமுடியும் என்று அவர் தெரிவித்தார்.