முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடம் தனிச் செயலாளராக இருந்தவரும், சன் டிவி ஊழியர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய தயாநிதி மாறன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ’’ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் என் மீதான பொய் புகார்களுக்குக் காரணம். என் மீதான புகார்கள் அனைத்தும் பொய்யானவை. அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனது வீட்டுக்கும், சன் டிவிக்கும் 300 தொலைபேசி இணைப்புகள் இருந்ததாகக் கூறுவது தவறு.
எனக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சன் டிவியில் தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்பட்டன என்று கூறினால்தான் என்னை சிக்க வைக்க முடியும் என்று இப்படி பொய்ப் புகார் கூறப்பட்டுள்ளது.
1 கோடி அளவுக்கு தொலைபேசி பயன்படுத்தியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு சிவில் குற்றம். இதற்காக நோட்டீஸ் அனுப்பினால், அந்த தொகையை அபராதத்துடன் சேர்த்துக் கட்டத் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார்.