இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் காரணமாக 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என வவுனியா வைத்தியசாலை
பிரதிப் பணிப்பாளர் சுதர்சினி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா , முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் வெகுவாக பரவி வருகின்றது. இந்தநிலையில் பிரதிப் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.
முல்லைத்தீவில் இருந்து கடந்த முதலாம் திகதி கர்ப்பிணிப் பெண் ஒருவர் எமது வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
தற்போதுவரை 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் இந்த நோய் தாக்கம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் அதிகமானவர்கள் முல்லைத்தீவில் இருந்தே மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களாவர். இந்த வைரஸ் தாக்கம் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், சிறுநீரக பாதிப்புக்குள்ளானோர் ஆகியோர் மீது வேகமாக தொற்றுகின்றது.
ஆகவே, வைத்தியசாலையில் இந்த நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்களை தேவையற்ற வகையில் வைத்தியசாலைக்கு அழைத்து வருவதை தவிர்க்கவும்.
இந்த நோய்க்குரிய மருத்து அரச வைத்தியசாலைகளில் மட்டுமே உள்ளன. எனவே, காய்ச்சல், தடிமன், தலையிடி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்