தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது
. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இடையே இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் மத்திய அரசின் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்காக, தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டன. இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசு, கெயில் நிறுவனத்துக்கு 2013 ஏப்ரல் மாதம் உத்தரவு ஒன்றை அனுப்பியது.
அதில், ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலையோரமாக குழாய்களை பதித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அப்போது கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, இயற்கை எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியாக எடுத்து செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2014 ஜனவரி மாதம் சென்னை சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது.
அப்போது திட்டம் வரையறுக்கபட்டபோது தமிழக அரசு மவுனம் காத்தது ஏன்? என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இத்திட்டத்தில் தலையிட தமிழக அரசுக்கு உரிமையில்லை என காட்டமாக தெரிவித்தது.
மேலும் அரசியல் காரணங்களுக்காக, வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறதா எனவும் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டில் இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 40 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டம் அமல்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது. இது கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட உள்ள மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.