ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட குறித்த ஒலி நாடா ஒன்று ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து கொழும்பு பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எக்நெலிகொட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உரையாடியமை தொடர்பிலான ஒலி நாடா ஒன்றே இவ்வாறு சில இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
எக்நெலிகொட புலிகளுடன் தொடர்பு பேணியதாகவும் அதற்கான ஆதாரம் அடங்கிய ஒலி நாடாவை இராணுவத்தினர் ஹோமாகம நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.இந்த ஒலி நாடா நீதிமன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஒலி நாடா விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒலி நாடா தகவல்களை இராணுவத்தினர் ஊடகங்களுக்கு வழங்கியிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எவ்வாறெனினும், வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதனால் இது குறித்து கருத்து வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.