வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை
தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.தி.மு.க வேட்பாளர் பட்டியல் நேற்று (13-ம் தேதி) வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இதில் அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்ற வேண்டும், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் பாபுவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என நேற்று (13-ம் தேதி) இரவு அவரின் ஆதரவாளர்கள் அணைக்கட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதிலிருந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் இன்று (14-ம் தேதி) நூற்றுக்கணக்கில் திரண்டு வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி வேட்பாளருமான ஏ.பி.நந்தகுமாரை சரமாரியாகத் தாக்க தொடங்கினர். இந்த கைகலப்பில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான முகமது சகி, முன்னாள் மேயர் கார்த்திகேயன் ஆகியோர் சட்டை கிழிக்கப்பட்டது. அதோடு முன்னாள் அமைச்சர் துரைமுருகனையும் தகாத வார்த்தைகளால் வசைபாடினர்.
இதுகுறித்து, காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து கூட்டத்தை அப்புறப்படுத்தி, மாவட்ட செயலாளர் நந்தகுமாரையும், முன்னாள் எம்.பி. முகமது சகி, முன்னாள் மேயர் கார்த்திகேயன் ஆகியோரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.