உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபரின் நியமன விவகாரத்தில் அதிகளவு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமது தரப்பில் இருந்து எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்கவில்லை என்பதே உண்மையான விடயம் என யாழ்ப்பாணத்திலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பதை விரும்பாத காரணத்தாலேயே உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் குறித்து இதுவரை தாம் கருத்துக்களை வெளியிடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தமக்கு எதிராக பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்போது பாடசாலை சுமுகமாக இயங்குவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒய்வுபெற்ற அதிபர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவரின் பதவி நீக்கத்திற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதற்கு அப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், குறித்த அதிபரை மீள நியமனம் செய்திருந்ததாக சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.