புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2019

நிதி மோசடி - இந்து மகளிர் அதிபருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்
.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று  இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு  கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார்.

வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு துணைபோகும் செயற்பாடு தொடர்பானது” எனக் குறிப்பிட்டு வடமாகாண ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையின் தற்போதைய அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பாடசாலையின் உதவி அதிபராக செயற்பட்டுவரும் க.சசிதரன் அத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

அதுகுறித்த உதவி அதிபர் தொடர்பாக அதிபரால் ‘தனது செயற்பாடுகளுக்கு உதவி அதிபரால் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை’ என்று கூறி யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் உதவி அதிபரிடம் யாழ். வலயக் கல்விப்பணிப்பாளர் விளக்கம் கோரப்பட்டது. அவரால் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், பாடசாலை அதிபரின் நிதி மோசடி உள்பட19 விதமான முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பித்து யாழ்.வலயக் கல்விப் பணிமனையினருக்கு உதவி அதிபர் முறைப்பாடும் செய்திருந்தார். இவற்றுக்கு துணைபோகாததாலேயே தன்மேல் அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


இந்த முறைப்பாடுகளில் பின்வருவன மிகப் பெரும் நிதி மோசடி நடைபெற்றுள்ளமைக்கான சில சான்றுகளாகும்.

1. 2018ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களிடம் 15,000/- ரூபா அதிபர் பெற்றிருந்த நிலையில் சிலருக்கு மட்டுமே பற்றச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் – பற்றச்சீட்டு வழங்கப்படாத பெற்றோரை தன்னால் இனங்காட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2. 2017ஆம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இறுதிக் கௌரவிப்பின்போது 100, 000/- ரூபா சேர்த்து அதிபரிடம் வழங்கியுள்ளார்கள். இப்பணம் இன்றுவரை பாடசாலை கணக்கில் வைப்பிலிடப்படவில்லை

3. ஒருவரால் பாடசாலைக்கென வழங்கப்பட்ட லப்டப் கணனி மற்றும் புறஜெக்டர் என்பன பொருட் பதிவேட்டில் பதியப்படவுமில்லை. பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

4. 2018ஆம் ஆண்டு நடனவிழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25, 000 ரூபா பெறுமதியான காசோலை வைப்பிலிடப்படவில்லை.

இவ்வாறான  மோசடியில் ஈடுபட் அதிபரை அந்தப் பாடசாலையிலேயே தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதித்து உதவி அதிபரை ஆரம்பக்கட்ட விசாரணைக்காக இடமாற்றம் செய்யும் செயற்பாடு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உதவி அதிபரை மட்டும் இடமாற்றுவதன் மூலம் சாட்சியங்களையும், தடயங்களையும் அழிக்கக்கூடிய உதவியைப் புரிவதற்காகவே வடமாகாண கல்வி அதிகாரிகளால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.

இவ்விசாரணையின் பொருட்டு சாட்சியங்கள் மறைக்கப்படாமலும், அச்சுறுத்தப்படாமலும் காணப்படும் பொருட்டு குறித்த பாடசாலையின் அதிபரும் ஒரே நேரத்தில் இடமாற்றப்பட்டு கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.

யாழ்ப்பாண வலயக் கல்வி அதிகாரி ஒருவர் அதிபருக்கு எதிராக சாட்சி வழங்க தயாராயிருக்கும் அன்பளிப்பாளர் ஒருவரை அழைத்து அதிபரின் முறைகேட்டை பெரிதுபடுத்தவேண்டாம் என கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இவ்விதமான வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேட்டாளர்களுக்கு சாதகமாக செயற்படும் போக்கு மிகப்பெரிய முறைகேடாகும்.

இந்த முறைகேடுகள் தொடர்பாக நீதியான விசாரணையை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.

இவ்விடயத்தில்  ஆளுநராகிய தாங்கள் அதீத கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி கடிதத்தின் பிரதிகள் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

ad

ad