கோத்தாபய ராஜபக்ஷவை பார்த்து தமிழ் மக்கள் பயப்படவில்லை அவர் பத்து தலை இராவணன் போல வந்தாலும், தாம் அவரை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தெரிவித்துள்ளார்.
ரெலோவின் ஆரம்பத் தலைவர் அமரர் நடராசா தங்கத்துரையின் 71ஆவது ஜனன தின நிகழ்வு, வல்வெட்டித்துறை - நெற்கொழு விளையாட்டு மைதானத்தில், நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'' ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகிவற்றின் தலைவர்கள் அனைவரும், போர்க்குற்றத்துடன் தொடர்புடையவர்கள். சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளமையானது, மைத்திரி அரசாங்கம் தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் எதிராக ஒரு போர் பிரகடனத்தை செய்துள்ளதை போன்று அமைந்துள்ளது.
தமிழர்களாகிய நாம், தம்மை தாமே ஆளும் அதிகாரம் கிடைக்கும் வரை தாம் ஓயமாட்டோம், அந்த அதிகாரம் கிடைக்க மறுக்கப்படும் சூழ்நிலையில், சுதந்திர தனி நாடாக உருவாகவே வழிவகுக்கும் .அதனை தென்னிலங்கை கட்சிகளே முடிவெடுக்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.