புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2020

தேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்?.அருந்தவபாலன்

தங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் நிராகரித்துள்ளார்.

ஜனநாயக தேர்தலில் கிடைக்கும் வாக்குகளே அதனை மெய்ப்பிக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அச்சமடைந்துள்ளனர். அதன் வெளிப்பாடாகவே அரசியல் திருகுதாளங்களைச் செய்கின்ற கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்” என விக்கினேஸ்வரன் தலைமையிலான அணி தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கையிலையே அருந்தவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எமது அணி தொடர்பில் கூட்டமைப்பினர் கூறிவருகின்ற விடயங்களில் ஒரு விடயத்தை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். விக்கினேஸ்வரன் தலைமையிலான இந்த அரசியல் முன்னெடுப்பு என்பது, ஏற்கனவே இருந்து வந்த பல்வேறு சுயநலன்களை அனுபவித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு போட்டியாக உள்ளது. இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற விடயமாகும்.

அவர்கள் நீண்ட காலமாக மக்களை ஏமாற்றி தங்களுடைய பதவி சுகங்களை அனுபவித்து வந்தவர்கள். அதைத் தொடர்ந்து தக்க வைக்க விரும்புகின்றார்கள் என்பது உண்மை. அவ்வாறு தொடர்ந்து அனுபவித்த சலுகைகளும் பதவிகளும் பறிபோவதை அவர்களின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

அதன் காரணமாகவே அவர்கள் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியை அல்லது அவரைப் பற்றி விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.

உண்மையில் கூட்டமைப்புக்கு எங்கள் அணி எந்த வகையிலான சவாலும் விடாது அல்லது போட்டியாக இருக்காது என்றால் எங்கள் அணியைப் பற்றிக் கதைக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் எங்களுடைய அணியைக் கண்டு பயப்படுகிறார்கள். அந்தப் பயத்தின் வெளிப்பாடுதான் சுமந்திரனோ அல்லது அந்தக் கட்சி சார்ந்தவர்களோ சொல்கின்ற விடயங்களாக இருக்கின்றன.

இதில், குறிப்பாக சுமந்திரன் சொல்கின்ற விடயங்கள் இங்கு ஒன்று அங்கு ஒன்று காலையில் ஒன்று மாலையில் ஒன்று எனப் பல அரசியல் திருகுதாளங்களைச் செய்கிறார். எனவே, அவர்களின் விமர்சனங்களைப் பெரிதாக எடுக்கத் தேவையில்லை.

இன்றைக்கு கூட்டமைப்பு மீதும் அவர்களுடைய செயற்பாடுகள் மீதும் மக்கள் பெருமளவுக்கு வெறுப்புற்று விரக்தியுற்று இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் அந்த மக்களுக்குச் சரியான மாற்றுத் தலைமைத்துவத்தை சரியான முறையில் வழிநடத்தினால் நிச்சயமாக மக்கள் அதற்கு ஆதரவு வழங்குவார்கள்.

விக்கினேஸ்வரன் ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவர் மீது தமிழ் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது.” என்றார்.

ad

ad