3வது டெஸ்ட்: 81 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்இந்திய பந்து வீச்சாளர்களின் அதிரடியால் இங்கிலாந்து அணி 3வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் 81 ரன்களில் சுருண்டது
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த டெஸ்டில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
ஆனால், இரவு உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும் (82 பந்து, 9 பவுண்டரி), ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. எனினும், ரோகித் 66 மற்றும் கில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 27 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அஸ்வின் 17 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். இஷாந்த் சர்மா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 53.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 33 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணியில் கேப்டன் ரூட் 19, ஸ்டோக்ஸ் 25, போப் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால், இங்கிலாந்து அணி 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது. இரவு உணவு இடைவேளை வரை இந்தியாவின் ரோகித் 6, கில் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற 38 ரன்களே தேவை. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் அடைந்து உள்ளது.