யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை திங்கட்கிழமை தாய் பால் அருந்திய போது புரைக்கேறி உள்ளது. அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார். குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரிய போது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர். சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார். அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் , குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர். தாய் , தனது குழந்தையின் சடலத்துடன் , நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து , அங்கிருந்து வேலணை வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டிக்கு அறிவித்து ,அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் , அம்பியூலன்ஸ் வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை அம்பியூலன்ஸ் வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர். பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை அம்பியூலன்ஸ் வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர். |