புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2023

ஆஸி.யை சுழல் மும்மூர்த்திகள் சுருட்டியது எப்படி? மெதுவான ஆடுகளத்தில் இந்தியா சாதிக்குமா?

www.pungudutivuswiss.com
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்துவரும் உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களில் இந்திய அணி கட்டுப்படுத்தியுள்ளது. பலமான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை இந்திய அணி மிகக் குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எப்படி? சென்னை ஆடுகளம் எப்படி இருந்தது? இந்திய அணியின் பேட்டிங்கிற்கு ஆடுகளம் ஒத்துழைக்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சி

உலகக்கோப்பை கிரிக்கெட் ஐந்தாவது லீக் போட்டி இன்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இந்த லீக் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. மிட்செல் மார்ஷை ஜஸ்பிரித் பும்ரா டக்அவுட்டாகி வெளியேற்ற, அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், மற்றொரு தொடக்க வீரர் வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். இதனால், ரன் ரேட் அந்த அணி எதிர்பார்த்தபடி அமையவில்லை. மிகவும் மந்தமாகவே இருந்தது. ரன்ரேட் நெருக்கடியால் அடித்தாட முற்பட்டு, டேவிட் வார்னர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழல் மும்மூர்த்திகள் அசத்தல்

இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறினார்கள். சென்னை ஆடுகளம் மெதுவான ஆடுகளம் என்பதால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் எதிர்பார்த்த ஷாட்களை ஆடமுடியவில்லை. “ஸ்லோ பிட்ச்”சில் அஸ்வின், குல்தீப் பந்துவீச்சு மிகத் துல்லியமாக இருந்ததால் ஷாட்களை அடிக்க ஸ்மித், லாபுஷேன் தடுமாறினார்கள்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்று வலுவாக இருந்தது. ஏற்கெனவே ஆனால், 30 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சில் இழந்தது. துல்லியமான பந்துவீச்சுக்கு மத்தியில், ரன் சேர்க்க வேண்டிய நிர்பந்தம், விக்கெட்டை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் அழுத்தத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தார்கள்.

அஸ்வினின் பந்துவீச்சு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் வீசிய “ரிவர்ஸ் கேரம்பால்” ஆஸ்திரேலிய பேட்டர்களை பெட்டிப்பாம்பாய் அடக்கி வைத்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் தனது மோதிர விரலை மடக்கி, நடுவில் பந்தை வைத்து வீசும்போது, ஏறக்குறைய இன்ஸ்விங் போல் களத்தில் இறங்கியது, இந்த பந்தை சமாளிக்க, ஆஸ்திரேலிய பேட்டர் லாபுஷேன் திணறிவிட்டார். ஆனால் அஸ்வினின் இந்த கேரம்பால் மாயஜாலத்துக்கு கேமரூன் க்ரீன் இரையாகிவிட்டார்.

புதிய அவதாரம் எடுத்து வந்துள்ள குல்தீப் யாதவ், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் அதிரடிக்கு பெயரெடுத்த மேக்ஸ்வெல்லுக்கு படம் காட்டி, 15 ரன்னில் க்ளீன் போல்டாக்கி குல்தீப் வெளியேற்றினார். 2019ம் ஆண்டுக்கு முந்தைய குல்தீப் யாதவின் பந்துவீச்சு இல்லாமல், முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

குல்தீப் யாதவ் பந்துவீசும்போது, காற்றிலேயே பந்தை “டாஸ் செய்து” வேகத்தோடு வந்து பிட்ச் ஆகும்போது பந்து எந்தத் திசையில் செல்கிறது என்பதை பேட்டர்களால் கணிக்க முடியவில்லை. அதேபோல டேவிட் வார்னரை ரன் எடுக்கவிடாமல் வெறுப்பேற்றி ஆட்டமிழக்கச் செய்தார் குல்தீப் யாதவ்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜடேஜாவின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸ். 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ஜடேஜாவுக்கு, சேப்பாக்கம் மைதானம் ஐ.பி.எல்.லில் சொந்த மைதானம் என்பதால், ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்டர்களை திணறவிட்டார்.

ஆஸ்திரேலிய அணி 20வது ஓவரில் பவுண்டரி அடித்தநிலையில் அதன்பின் 73 பந்துகளுக்குப் பின் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து பஞ்சத்தை தீர்த்துவைத்தார். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, குல்தீப், அஸ்வின் மூவரும் நடுப்பகுதி ஓவர்களை கையில் எடுத்து ஆஸ்திரேலிய ரன் குவிப்பை ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், ஆஸ்திரேலிய பேட்டர்களால் எந்த ஷாட்களையும் நினைத்துபோல் ஆடமுடியாமல், விக்கெட்டை இழந்தனர்.

ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்து பழைய பும்ராவாக திரும்பி வந்துள்ளார். துல்லியமான யார்கர், அவுட்ஸ்விங், கட்டுக்குள் இருக்கும் வேகம், என பும்ரா அற்புதமாகப் பந்துவீசி, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முடிவில் 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 199 ரன்களில் சுருண்டதற்கு முக்கியக் காரணம் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், அஸ்வின், மற்றும் ஜடேஜா ஆகியோர்தான். இந்த மூவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

173 டாட் பந்துகள்

இந்த ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரலேய பேட்டர்கல் 173 டாட் பந்துகளை விட்டனர். அதாவது 28 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்காமல் பந்துகளை வீணடித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியதிலேயே 3வது மிக மோசமான இன்னிங்ஸ் இதுவாகும்.

டாட்பந்துகள் வழங்கிய வகையில், பும்ரா 41 பந்துகள், ஜடேஜா 38 பந்துகள், அஸ்வின் 32 பந்துகள், குல்தீப் 31 பந்துகள், சிராஜ் 26 பந்துகளை டாட்பந்துகளாக வீசினர்.

ஆஸி. பந்துவீச்சை இந்தியா சமாளிக்குமா?

இன்றைய ஆட்டம் குறித்து சுருக்கமாகக் சொல்வதாக இருந்தால், ஆஸ்திரேலியா 11வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள், 25வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள், அடுத்து…199 ரன்களுக்கு ஆல்அவுட்.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(41), ஸ்மித்(46), ஸ்டார்க்(28) ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். மற்ற பேட்டர்கள் இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், சொற் ரன்னில் வெளியேறினர்.

சுழற்பந்துவீச்சை சமாளித்து ஆடுவதற்கு கடினமாக இருக்கும் ஆடுகளத்தில் ஆடம் ஸம்பா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சை எவ்வாறு இந்திய பேட்டர்கள் சமாளிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பும்ரா, சிராஜுக்கே பந்து இவ்வளவு ஸ்விங் ஆகிறது, துல்லியமாகப் பாய்கிறது என்றால் கம்மின்ஸ், ஸ்டார்ஸ், ஹேசல்வுட்டுக்கு கேட்கவா வேண்டும். ஆதலால் இந்திய அணிக்கு சேஸிங் மிகப்பெரிய போராட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad