மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழகத்தில் ரயில் மறியல்! 2000 க்கு மேற்பட்டோர் கைது!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள் இன்று பரவலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தியவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
வேல்முருகன் தலைமையில், காஞ்சிபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 200 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
அத்துடன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கரூரில் ரயிலை மறிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது ராஜபக்சவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்த 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாம் இணைப்பு
ராஜபக்சவுக்கு எதிர்ப்பு - வேல்முருகன் உட்பட 2 ஆயிரம் பேர் ரயில் மறியல்
ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 2 ஆயிரம் பேர் கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் 2 ஆயிரம் இன்று கடலூர் ரயில் நிலையத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டனர்.
இந்த ரயில் மறியலால் ௦சென்னையில் இருந்து திருச்சி சென்ற சோழன் விரைவு ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட வேல்முருகன் உட்பட 2 ஆயிரம் பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களை கைது செய்த காவல்துறையினர், உடனடியாக விடுதலை செய்தனர்.