சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர்ந்தோரின் ஏஜன்ட் உடன் வெளியேற்ற வேண்டும் என்கிறார் அஸ்வர்
இன்று இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தும் சனல் - 4 தொலைக்காட்சி தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் நடத்திய அராஜகங்களின் போது எங்கிருந்தார்கள். இத்தொலைக்காட்சியைச்
சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஏஜன்ட்டுகள், அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக கண்காணிப்பு எம்.பியுமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் கேள்வி நேரத்தின்போது சனல் - 4 தொலைக்காட்சி தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார்.
பொதுநலவாய அமைப்பின் அமர்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துமுகமாக நடைபெற்ற மேற்குறிப்பிட்ட மாநாட்டில் பொதுநலவாய அ ைமப்பின் பேச்சாளர் ரிச்சர்ட் உக்குவும், இணைப்பேச்சாளர் அநுராதா ஹேரத்தும் கலந்துகொண்டனர்.
சனல் - 4 இன் சார்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் கெலும் மக் ேர, ஜொனதன் மில்லர் என்போர் இலங்கையில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தத்தின்போது காணாமற்போயுள்ள ஆயிரக்கணக்கானோர் தொடர்பாக பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதா என்று கேள்வி எழுப்பியதுடன்,
கடந்த சில நாட்களாக தாம் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், தாம் செல்லுமிடமெல்லாம் புலனாய்வுப் பிரிவினர் தொடர்வதாகவும் தெரிவித்தனர். ஜனாதிபதி நடத்தவிருந்த ஊடகவியலாளர் மாநாடு ஏன் நிறுத்தப்பட்டது. ஜனாதிபதி எமது கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லையா என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதனையடுத்து உணர்ச்சிவசப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நான் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதன் பின்பே மிக உரத்த குரலில் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், மனித உரிமை மீறல்கள் பற்றி இங்கு பிரஸ்தாபிப்பவர்கள் யாரினால் அதிகமாக மனித உரிமை மீறப்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் விடுதலைப் புலிகளே மனித உரிமை மீறல்களில் அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள். வடக்கிலிருந்து சுமார் 75 ஆயிரம் முஸ்லிம்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள்.
கெப்பித்திகொல்லாவையில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். இந்த மனித உரிமை மீறல்கள், அராஜகம் நடந்தபோது சனல் - 4 தொலைக்காட்சி எங்கிருந்தது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய தமிழ் பெண் ஒருவர் வெள்ளவத்தையில் அவரது கணவருடன் சேர்த்து விடுதலைப் புலிகளினால் கோரமாக கொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் சிறுவர்களை தமது படையில் இணைத்து யுத்தத்தை தொடர்ந்து நடத்தியது. சனல் - 4 இவைகளை மறந்துவிட்டதா? பொதுநலவாய அமைப்பு இவற்றை கவனத்திற்கொள்ள வேண்டும்.
இது ஒரு ஜனநாயக நாடு. இதனாலேயே சனல் - 4 தொலைக்காட்சிக்கு வருகைதர இலங்கை அனுமதி வழங்கியது. எமது ஜனாதிபதி எதிர்வரும் இரு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்பார்.
காத்தான்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்டனர். இவைகள் மனித உரிமை மீறல்கள் இல்லையா? என்று தொடர்ந்து ஏ.எச்.எம். அஸ்வர் சப்தமிட்டு பேசினார். அருகிலிருந்த சில ஊடகவியலாளர்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தும் முடியாமற்போனது.
ஊடகவியலாளர் மாநாட்டுக்கு தலைமை வகித்த ரிச்சார்ட் உக்கு மாநாட்டில் தனி நபர் ஒழுக்காற்றைப் பின்பற்றுமாறு வேண்டிக் கொண்டும் அஸ்வர் தனது உரையை நிறுத்திக் கொள்ளவில்லை.
பல தடவைகள் வேண்டிக்கொண்டதன் பின்பே அஸ்வர் அமைதியடைந்து தனது உரையை நிறுத்திக் கொண்டார். ஆங்கிலத்தில் உரையாற்றிய அஸ்வர் சில வார்த்தைகள் சிங்களத்திலும் பேசினார்.
ஒரு யுத்த நிலைமையின் போது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு. இச் சம்பவங்களை வைத்து தொலைக்காட்சி ஊடகவியலாளர்களை வெளியேற்றும்படி தெரிவிப்பது முறையானதல்ல எனத் தெரிவித்தார்.