புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015


“கிட்டண்ணாவும் அவரது தோழர்களும் வீரகாவியமாகி ஒரு தசாப்தம் தன்னை நிறை செய்கின்றது. தலைவர் அவர்களின் தம்பியாய், தமிழீழ தேசத்தின் முதுபெரும் தளபதியாய் மக்களின் தோழனாய் வாழ்ந்து அனைவரது
இதயங்களிலும் நிலைத்து விட்ட கிட்டு எனும் மனிதத்தின் எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம். கடமை நேரங்களில் அவரிடம் நிறைந்திருக்கும் கண்டிப்பு அவரது வீரத்தைப் போலவே பிரசித்தமானது. இது அனைவரும் அறிந்த ஒன்று. கடமைதவிந்த நேரங்களில் அவரிடமுள்ள கனிவான இதயம் எல்லோராலும் அறியப்படாத மற்றொன்று. எழுத்துக்களினால் வடிவம் கொடுக்க முடியாதது. அதனை நேரில் தரிசித்து உள்ளங்களால் உணர்ந்து கொள்ளப்பட வேண்டியது.
“புரட்சிக்காரர்கள்” என்பதால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது. ஆனால் அவன் மனிதனுக்குள் மென்மையானவன் . சாதுவானவன் ஆதலால்தான் அவன் சமூகத்தில் நிலவும் அநீதியை தாங்க முடியாதவனாகப் போராடப்புறபடுகிறான்.
எனும் அவரது நாட்குறிப்புத் தாங்கிய வரிகள் வாயிலாக அவரது மனதின் மென்மையின் ஆழத்தினைத் தரிசிக்க முயலலாம்.
நாம் ஏராளமான மரணங்களை கண்டுவிட்டோம். தோழர்களின் வீரமரணம் எம்மை பாதிக்காது, வீரமரணம் எமக்கு பரிச்சயமானது சாவை சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்று தான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணம் இதயத்தை உருக்குலைத்து உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிப்படுத்த முடியும்”
எனும் தன் தோழனின் மரணம் குறித்து மனக்குமுறலினை அவரது நாட்குறிப்பு தாங்கியிருந்தது. இத்தகைய மனவுணர்வுகளை உள்ளடக்கிய ஒரு மனிதத்தை தமிழீழ தேசம் இழந்து போனது என்பது ஜீரணிக்க முடியாத உண்மைதான். கிட்டண்ணாவின் முழுமையை அவரது பரிபூரனத்தினை இங்கு முழுவடிவமாகக் கொண்டு வரமுடியாது என்பது யதார்த்தமானது. என்னினும் அவரது நினைவுகள் தழுவிய இந்நாட்களில் அவரின் ஓரிரு பக்கங்களை இங்கு மீட்டுகின்றோம்.
■ நன்றியுணர்வு
இந்திய தமிழீழப்போர் ஆரம்பித்த இந்நாட்கள் கிட்டண்ணா இந்தியாவில் தங்கியிருந்து குண்டுத்தாக்குதலில் இழந்த தன் காலுக்கு சிகிட்சை பெற்றுக் கொண்டிருந்தார்.
அவர் குடியிருந்த வீட்டினுள் எப்படியோ ஒரு சொறி பிடித்த நாய் ஒன்று நுழைந்து கொண்டது. கிட்டண்ணாவுடன் உதவிக்கு நின்றிருந்த போராளிகள் அவர் ஏசிவிடுவார் என்ற நினைப்பில் அந்த நாயினைத் துரத்த முற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரும் அதனைக் கண்டுகொண்டார். உடனேயே அந்த நாயினைக் கூட்டிவரச் சொன்னார். குளிப்பாட்டினார். அதன் உடல் மீது காணப்பட்ட புண்களுக்கு மருந்திட்டார். விரைவில் புண்கள் மாற்றமடைந்து அந்த நாய் குணமாகியது.
இப்போது அது கிட்டண்ணாவின் உற்ற நண்பன். அவர் உணவருந்தும் போதும், நீராடும் போதும், தூங்கும் போதும், அதனையும், அவரை ஒத்ததாகவேயிருக்கும். அது அவருக்கான காத்திருப்பகவும் விளங்கும். நாளடைவில் இருவருக்குமான நட்பு பலமடைந்து சென்றது. இருவரும் நல்ல நண்பர்களாயினர். காலங்கள் கழிந்ததன.
1988 தமிழீழ இந்தியப் போர் தீவிரம் அடைந்த வேலை கிட்டண்ணாவினை கைது செய்து சிறையினுள் தள்ளிவிட எண்ணியது இந்திய அரசு. இது தமது ஆக்கிரமிப்பு போருக்கு பக்கதுணையாகவிருக்கும் என்றும் நம்பியது.
கைதும் நிகழ்ந்தது. சென்னையிலுள்ள சிறைச்சாலைக்கு கிட்டண்ணா கொண்டு செல்லப்பட்டார்.
இப்படியான துரதிஷ்டமான நிகழ்வினை அது நினைத்துக் கூடப்பார்த்திருககது. அவரின் பிரிவித்துயரினை தாங்கமுடியாது சோகத்துடன் அங்குமிங்கும் ஓடித்திரிந்தது. கிட்டண்ணாவைத் தேடியது. உணவு உண்ண மறுத்தது. கிட்டண்ணாவின் பாவனையிலிருந்த இடங்களெல்லாம் மோர்ந்து மோர்ந்து பார்த்தது. பலனேதுமில்லை. இறுதியில் சோகத்துடன் ஒரு மூலயில் ஒதுங்கி அவ் இடத்திலேயே தனது வாழ்வினை முடித்துக்கொண்டது. சிறைக்குள்ளிருந்து செய்தியறிந்த கிட்டண்ணா அதிர்ந்து போனார். பிற்காலத்தில் அவர் மேற்குலகில் வாழ்ந்த நாட்களில் அழகான விதம் விதமான நாய்களைக்காணும் போதெல்லாம் அந்த நாயின் முகம் அவரது மனக்கண் முன் தோன்றி அவரின் இதயத்தை ஈரமாக்கும். அந்த இதயத்தின் ஈரம் அவரது கண்களில் வந்து நிற்கும்.
பாரத மாதாவின் புண்ணியத்தினால் கிட்டண்ணா நாடு நாடாக அலைந்து கொண்டிருந்தார். அவர் தலைமறைவாக பல நாடுகளில் வாழ்ந்த காலம் அது. அந்தநாட்கள் சோகமானது, சுமையானது, அவரது என்ன ஓட்டங்களுக்கேற்ப அவரால் இயங்க முடியாது போயிருந்த நாட்கள் அவை.
பரந்து விரிந்த அந்த பெரும் தெரு. அதனை பனித்துகழ்கள் மறைத்துக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு மனதுக்கு ரம்மியமாகவிருந்தாலும் ரசிப்பதற்கு கிட்டண்ணாவின் மனது ஒத்தியங்கவில்லை. அவரது நினைவுகள் தாயகம் நோக்கி விரிந்து கொண்டிருந்தது. மண்ணை நினைத்து நினைத்து அவர் மனது ஏங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பெரும் தெருவினை அவரது பாதங்கள் கடந்து கொண்டிருக்கிறது. ஒரு மனிதராக இருக்க வேண்டும். ஆனால் இப்போது அவரிடம் நாளை பற்றிய நம்பிக்கைகள் ஏதும் இருபதாகத் தோன்றவில்லை. இனியும் இருக்கும் என்று நம்பவும் முடியவில்லை.
இப்போது அந்த மனிதர் கிட்டண்ணா முன்னிலையில். அவர்களிடை வார்த்தைகள் ஏதும் பேசிக்கொண்டதாக அறியவில்லை. அவர்களது பார்வைகளும் உள்ளுணர்வுகளும் மட்டுமே பேசியிருக்க வேண்டும். சிறிது நேரம் கழிந்த நிலையில் குட்டியாக ஒரு உரையாடல். கிட்டண்ணா தன்னிடமிருந்த சிறுதொகைப் பணத்தினை அவருக்கு உதவினார். பார்வைகளால் நன்றி பகிர்ந்த வயோதிபர் அவ்விடத்திலிருந்து நகர்ந்து கொண்டிருந்தார். வயோதிபர் கிட்டண்ணாவின் கண்களிலிருந்து இப்போது மறைந்து கொண்டிருந்தார்.
திடீரென நினைவுக்கு வந்தவர் தன் கூடவந்த தோழர்களை நோக்கித் திரும்பிய போது அவருடைய முகம் சோகத்தினுள் புதைந்து விழிகள் நீர் சொரிந்திருந்தன. கலங்கிய விழிகளுடன் அருகிருந்த தோழர்களுக்கு அவர் தளதளத்த குரலில் கூறிய வார்த்தைகள்……
“உலகில் ஏழைகள் என்று யாரும் இருக்கக்கூடாது” போராட்ட வாழ்வில் மட்டுமல்லாது பொதுவாழ்விலும் தனது மனதை அன்பினால் நிரப்பி தூய்மையைப் பேணி வாழ்ந்தவர் கிட்டண்ணா. ஏழை மக்களது வாழ்வில் அக்கறை கொள்ளும் பண்பும் எப்போதுமே அவரிடம் நிலைத்திருந்தது. ஏழை மக்களது வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறை எழுத்துக்களினால் வடிவம் கொடுக்கக் முடியாத ஒன்று. அவரது நாட்குறிப்பேட்டில் குறிப்புக்களில் அதிகமான பக்கங்களில் ஏழைகள் வாழ்வே இடம் பிடித்திருந்தது என்பது எல்லோருக்கும் தெரியாத ஒன்று.
அவரது இந்தக் கனிவான மன இயல்பே அவரது இறுதிக் காலங்களை ஆன்மிகம் நோக்கி நகர்த்தியிருக்க வேண்டும் என எண்ணுகின்றேன். இந்த ஈடுபாடுதான் ஆன்மீகத்துக்கும் புரட்சிக்குமிடையிலான உடன்பாடுகளை அவரை பரிசோதனைகள் மேற்கொள்ளும் அளவுக்கு உயர்த்தியிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் தன் இறுதிக்கால நாட்களில் தன் துணைவியாருக்கு எழுதிய மடல் ஒன்றில் விறகு கொத்தும் கந்தனும் கள் வடிக்கும் பூதனும் கோவணத்துடன் தோட்டம் கொத்தும் இராமையாவும் கரைவலை இழுக்கும் கோபுவும். தனது வாழ்நாளிலும் சரி வயது போனகாலங்களிலும் சரி மற்றவர்களில் தங்கி வாழ்ந்ததையும் பிச்சை எடுத்து செத்ததையும் பார்த்திருக்கிறேன். இவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும். இதைத்தான் ஆன்மீகமும் சொல்லுகிறது. புரட்சியும் சொல்லுகிறது. ஆன்மீகம் போதிக்கிறது. புரட்சி வழிகாட்டுகிறது. ஆன்மீகமும் புரட்சியும் வேற வேறல்ல, இரண்டும் ஒன்றுதான் என தனது மனதின் முடிவினை அதில் வரைந்திருந்தார்.
மக்கள் படும் இன்னல்களில் பங்கெடுக்க வேண்டும் அவர்களுக்கு ஒரு அமையான கெளரவமான வாழ்வு கிட்டவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு அவரது சமாதானப் பயணம் ஆரம்பமாகியது. ஆனால்….!
கிட்டண்ணாவும் அவரது தோழர்களும் வீரகாவியமாகி ஒரு தசாப்தம் நிறைவுறும் இந்நாட்களில் மீண்டும் எமது தாயகத்தில் ஒரு சமாதானச் சுடரும் எம்மை சுட்டெரித்து விடாதபடி அவர்களது நினைவுகள் எம்மை வழிகாட்டிச் செல்லட்டும்.
■ இராஜதந்திரம்
சூரியனைக் காணாது கடிகார முட்களின் நகர்வுகளால் மட்டுமே புதிதான பொழுதில் பிரசவிப்பு நிகழும் காலம் அது. கடும் குளிருடன் இணைந்த பனிகூட தாயகம் நோக்கி துரத்தும் சூழல். இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம். பல்வேறு வல்லரசுகளின் அழுத்தங்களின் மத்தியிலும் பம்பரமாய் கிட்டண்ணா சுழன்றடித்த பொழுதுகள் இலகுவில் மறக்கக் கூடியவையல்ல. ஒரு நள்ளிரவுக்கும் அதிகாலைக்குமிடையிலான குறுகிய நேரத்தூக்கத்தோடு வல்லரசுகளின் அழுத்தங்களை ஓயாது எதிர் கொண்டு சர்வதேச அரசியல் பொறுப்பாளராக கிட்டண்ணா பிரித்தானியாவில் இயங்கிய காலமது.
கிட்டண்ணா இந்தியா சென்ற போது அவரைப்பார்க்க ராஜீவ் காந்தியின் கறுப்புப் பூனைகள் எப்படி முண்டியத்தனரோ? அதுபோலவே சர்வதேச அரசியல் பொறுப்பாளராக பிரித்தானியாவில் இயங்கிய காலத்திலும் சர்வதேசப் பத்திரிகையாளர் ஒருவர் கிட்டண்ணாவினை செல்வி கண்டு கொண்டிருந்தார். பத்திரிகையாளர் தனது தற்திறமையினை வெளிக்காட்ட எண்ணியிருக்கலாம். அல்லது கிட்டண்ணாவை ஒரு தர்மசங்கட நிலைக்குத் தள்ளிவிட நினைத்திருக்கலாம். இதில் எதுவோ தீடிரென ஒரு கேள்வியினைத் தூக்கிப்போட்டார்.
“நீங்கள் போராட்டம், புரட்சித் தமிழீழம் என்றெல்லாம் கூறுகின்றீர்கள், நீங்கள் கூறும் தமிழீழம் எப்படியானது. எப்படியான எல்லைகளை வரையறுத்தது. இலங்கைத்தீவில் எப்படியான ஒரு வடிவத்தினைக் கொண்டுள்ளது” என விவாவி தனது தந்திரமான கேள்வியினை நிறைவு செய்தார்.
கிட்டண்ணா கேள்வியின் உள்ளகத்தினை நன்குணர்ந்து கொண்டார். எமது போராட்டத்துடன் பரிச்சயமான ஒருவர் இவ்வளவு நாட்கள் நகர்ந்த நிலையில் இப்போது வந்து தமிழீழ எல்லைகள் பற்றிக் கேட்கும் வினாவில் புதைந்துள்ள சூழ்ட்சியினை உணர்ந்து கொண்டவராக பத்திரிகையாளரை சாதுவாக நோக்கினார்.
“கிட்டண்ணாவினை எப்படியோ மாட்டிவிட்டேன்” என்ற இறுமாப்புடன் பத்திரிகையாளரும் அவர் முன்னிருந்தார். கிட்டண்ணா மெல்ல புன்னகைத்தார். பதிலுக்குத் தயாரானார்.
“இலங்கைத்தீவின் வரைபடம் ஒன்றை எடுங்கள். வரைபடத்தில் கடந்த 15 வருடங்களாக சிறீலங்கா இராணுவம் எங்கு கொலைகளை புரிகின்றதோ” குண்டுகளைப் போடுகின்றதோ அந்த இடத்தினைப் பொயின்ற் பண்ணுங்கள். அதன் பிற்பாடு பாருங்கள் தமிழீழத்தின் எல்லையினை தாங்களாகவே தெரிந்து கொள்வீர்கள்” பத்திரிகையாளர் குளிக்கப் பொய் சேறு பூசிய கதையாக அபப்டியே அசந்து போனார். அடுத்த கேள்விக்கான தொடங்கு நிலையினை எட்ட முடியாதவராக சங்கடப்பட்டார்.
கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் பத்தாம் ஆண்டு நினைவில் வெளிவந்த கட்டுரையிலிருந்து……….
எரிமலை (தை,2003) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி : தேசக்காற்று

ad

ad