புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2015

இனப் பிரச்னைக்கு தீர்வு: மோடியிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்!




இணைந்த வட, கிழக்கு தமிழரின் தாயகம் என்றும், இணைந்த வடக்கு கிழக்கிலேயே இனப் பிரச்னைக்குத் தீர்வு காண
முடியும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.

இலங்கைக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கூறுகையி், "இனப்பிரச்னைக்கான தீர்வு ஏற்படுகின்ற போது வட, கிழக்கு இணைப்பு என்பது ஒரு முக்கிய விடயம். வட, கிழக்கு இணைப்பு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. எனினும் பின்னர் ராஜபக்‌சே தலைமையில் அந்த ஒப்பந்தம் இல்லாமல் செய்யப்பட்டது. தவிர வட, கிழக்கு என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றுபூர்வமான தாயகப் பிரதேசம் ஆகவே இனப்பிரச்னை தீர்வுக்கு வட, கிழக்கு இணைப்பு என்பது முக்கியம்.

சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக குடியேற்றப்பட வேண்டும். ஆனால் சொற்ப அளவிலேயே மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இன்றுதான் அதுவும் தொடங்கப்பட்டுள்ளது. மீதி எப்போது நடக்கும் என்பது தெரியாது. இந்த விடயங்களையே இந்தியப் பிரதமருக்கு எடுத்துக் கூறினோம்.

இவற்றுக்குப் பதில் அளித்து இந்தியப் பிரதமர் கூறுகையில், "இலங்கை ஜனாதிபதியை சந்தித்தேன். அவர் நிலம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சாதகமான கருத்துக்களை கொண்டிருக்கிறார். அவர் எனக்கு உறுதியளித்ததாக நான் சொல்ல மாட்டேன். ஆனால் இவை தொடர்பாக ஜனாதிபதி ஒரு சாதகமான மனநிலையை கொண்டிருக்கிறார் என நான் உணர்கிறேன். இது ஒரு புதிய அரசாங்கம். ஆகவே நீங்கள் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பொறுமை தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் ஏனைய அரசாங்கங்களேடு அணுகியதைப் போல இந்த அரசாங்கத்தோடு அணுகக்கூடாது. ஏனெனில் இது ஒரு புதிய அரசாங்கம் பல மாற்றமான கருத்துக்களை கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழத் தேசியக் கூட்டமைப்பின் குழு இவை தொடர்பாக விரிவாக ஆலோசித்து புதிய உத்திகள் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசவேண்டும். இனப்பிரச்னைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும்" என்றார்.

மேலும் ''இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே'' என்று கேட்டார். இதற்குக் கூட்டமைப்பினர் "ஆம் என பதில் அளித்தனர்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோரும் இந்தியத் தரப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளிவிவகாரச் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad