மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் திரு. ஜவாஹிருல்லா அவர்கள் இன்று என்னை சந்தித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.கழக
தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்' என ஃபேஸ்புக் பக்கத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி பதிவிட்ட, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதையே தனது பக்கத்திலும் பகிர்ந்திருந்தார் ஜவாஹிருல்லா.
' கூட்டணி கட்சி என்ற முறையில், அதிகாரப்பூர்வமாக இணைந்ததைத் தெரிவிக்கும் வகையில் கலைஞரை சந்தித்தோம்' என பேட்டி கொடுத்தனர் ம.ம.க நிர்வாகிகள்.
இதனையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவிடம் பேசினேன்.
" நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்தோம். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு கலைஞரை சந்தித்துப் பேசினேன். கூட்டணிக்குள் எங்களை வரவேற்பதாக தெரிவித்தார். இதே கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். தவிர, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு, சிறுபான்மையினர் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறது. எனவே, இந்தக் கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணியாக அமைய வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தையும் கலைஞரிடம் தெரிவித்தோம். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் உள்ள தி.மு.க முன்னணியினர் களப்பணியில் தீவிரமாகப் பணியாற்றி, வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறோம்"
"முன்பு ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். இப்போது கலைஞரை சந்தித்தோம். எந்தெந்த இடங்கள் எங்களுக்கு ஒதுக்கப்படும் என்பதெல்லாம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். அதற்கு முன்புவரை அதைப் பற்றிப் பேசும் நிலையில் இல்லை" என்றார் பேராசிரியர்.ஜவாஹிருல்லா.
இதையடுத்து, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் பேசினேன்.
" இந்தமுறை ராமநாதபுரத்தில் முஸ்லிம் வேட்பாளரை அ.தி.மு.க நிறுத்தினால் ஜவாஹிருல்லா போட்டியிடுவது சந்தேகம்தான். தி.மு.க கூட்டணியில் பத்து இடங்கள் வரை கேட்டிருக்கிறோம். ஆறு தொகுதிகள் வரையில் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதில், வேலூரில் வாணியம்பாடி, ஆம்பூர், திருநெல்வேலியில் ஒரு தொகுதி, தஞ்சாவூரில் ஒரு தொகுதி, ராமநாதபுரம், சென்னையில் ஒரு தொகுதி என பரவலாக மாநிலம் முழுவதும் ஆறு தொகுதிகளை முடிவு செய்திருக்கிறோம். ஒருவாரத்திற்கு முன்பே ஸ்டாலினை சந்தித்து ஒப்புதலும் வாங்கிவிட்டோம். இறுதியாக, ஐந்து தொகுதிகள் வரையில் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என உறுதியாக நம்புகிறோம்" என்றார்.
மனிதநேய மக்கள் கட்சியின் நம்பிக்கையை, தி.மு.க உறுதி செய்யுமா என்பதற்கான விடை விரைவில் தெரியும்.