பயங்கரவாத புலனாய்வு தடுப்புப் பிரிவனரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச்
செயலாளர் எஸ் சிவகரன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொண்ட பின்னர் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதானதாகவும் அறியமுடிகின்றது.
சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் வடக்கில் அண்மைய சில நாட்களாக சிலர் கைதாகி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதை பயங்கரவாத புலனாய்வு தடுப்புப் பிரிவு உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க, யாழ் நீர்வேலிப் பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவராக கருதப்பட்ட நகுலன் என அழைக்கப்படும் கனகபிள்ளை சிவமூர்த்தி தொடர்ந்தும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.