புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2016

மே 29 சென்னைக் கடற்கரைக்கு வாரீர்! வைகோ அழைப்பு


தமிழ் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுகள் புகழ்மிக்க வரலாற்றில், இயற்கைப் பேரழிவுகள்  நிகழ்ந்துள்ளன. பரந்துபட்ட தமிழர்களின் லெமூரியக் கண்டம் கடல் கோளால் கடலுக்குள் அமிழ்ந்து போனது. முதற்சங்கம் கண்ட கபாடபுரமும், இடைச்சங்கம் கண்ட தென்மதுரையும் கடலுள் புதைந்தன. ஆனால், தமிழர்களின் இந்த நீண்ட நெடிய சரிதத்தில், போர் முகத்தில் பிற இனத்தவரால் பேரழிவு நிகழ்ந்த சம்பவமே கிடையாது. இன்னும் கூறப்போனால், கரிகால் பெருவளத்தானின் முற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழர்கள் இமயம் வரை வென்று புலிக்கொடி நாட்டினார்கள். பிற்காலச் சோழர்கள் காலத்தில் கிழக்கு ஆசிய நாடுகளில் பல நாடுகளை வென்று வெற்றிக்கொடி நாட்டினார்கள். ஆனால், வென்ற நாடுகளில் அவர்கள் அங்கு வாழ்ந்த மக்களைக் கொடுமைப்படுத்தியதும் இல்லை; இன அழிவு செய்ததும் இல்லை. 

இருபதாம் நூற்றாண்டில், ஐம்பதுகளில் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டின் உதயம் வரை இலங்கைத் தீவில் அந்த பூமியின் பூர்வீகக் குடிமக்களாகிய ஈழத்தமிழர்கள், ஐரோப்பியர்களின் படையெடுப்பால் தங்கள் ஆட்சியை இழந்து, பிரித்தானிய ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காகத் தனித்தனி தேசிய இனங்களான தமிழர்களையும், சிங்களவர்களையும் ஒரே அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்தனர். 1948 பிப்ரவரி 4 ஆம் நாள் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியபோது, ஈழத்தமிழர்களை வஞ்சித்து, சோல்பரி ஆணையம் ஒரு அரசு அமைப்பை ஏற்படுத்தி, சிங்களவர்களின் அடிமை நுகத்தடியில் ஈழத்தமிழர்களைச் சிக்க வைத்து வெளியேறினர்.

மானத்தோடும் உரிமையோடும் வாழ முனைந்த ஈழத்தமிழர்கள், கல்வி, வேலை வாய்ப்புகளில் நான்காந்தரக் குடிமக்களாக வஞ்சிக்கப்பட்டபோது, சம உரிமை பெற்ற மக்களாக வாழ தந்தை செல்வா தலைமையில் அறப்போர் நடத்தினர். சிங்கள அரசு துப்பாக்கி முனையில், அறப்போரை ஒடுக்கிடக் கொடும் அடக்குமுறையை ஏவியது. தமிழர்கள் கொல்லப்பட்டனர். வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன. 

சிங்களவர்களோடு தந்தை செல்வா, 1957, 65 ஆம் ஆண்டுகளில் செய்து கொண்ட ஒப்பந்தங்களை, சிங்கள இனவாத அரசுகள் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டன. இனி சிங்களவர்களோடு இணைந்து வாழ இயலாது; மானத்தோடும், உரிமையோடும் ஈழத்தமிழர்கள் வாழ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசமே தீர்வு என்று, 1976 மே 14 இல், தந்தை செல்வா வட்டுக்கோட்டை மாநாட்டில் பிரகடனம் செய்ததோடு, இந்தப் போரை இனி இளைஞர்கள் முன்னெடுக்கட்டும் எனத் தீர்க்கதரிசனமாகச் சொன்னார். 

சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் உலக நாடுகள் பலவும் பின்பற்றிய ஆயுதப் போரை நடத்தினார். பல களங்களில் வெற்றியும் கண்டார். சுதந்திரத் தமிழ் ஈழ அரசு அமைக்கப்பட்ட நிலையில், இந்திய அரசு செய்த துரோகத்தாலும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லாண்மை  அரசுகளின் சதியாலும், விடுதலைப்புலிகளுக்குப் போர்க்களத்தில் பின்னடைவு ஏற்பட்டது. 

2004 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காங்கிரஸ் தலைமையில் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்து, கொலைகார ராஜபக்சே அரசின் இராணுவ வேட்டைக்குத் துணையாக இந்தியாவின் முப்படைத் தளவாடங்களையும் வழங்கி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்திய அரசே நடத்தியது.  

இம்மாபாதகச் செயலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 18 பேர் நெருப்பின் தணலுக்குத் தங்கள் உயிர்களைத் தந்து, தமிழக மக்கள் ஆர்த்து எழ எண்ணி மடிந்தனர். 

உலகில் எந்த இனமும் இத்தகைய கொடுமைகளைச் சகித்தது இல்லை. நீதிக்குப் போராடி தங்கள் இனத்தின் உரிமையை நிலைநாட்டி இருக்கின்றன. உலகில் பத்துக் கோடித் தமிழர்கள் வாழ்ந்தும், ஏழு கோடிப் பேர் தாய்த் தமிழகத்தில் இருந்தும், 18 கல் தொலைவில் நடந்த படுகொலைகளைத் தடுக்க முடியாத இழிவுக்கும் அவலத்திற்கும் ஆளானோம்.

2009 மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் 19 வரை ஈழத்தமிழர்கள் கற்பனை செய்ய முடியாத கொடுமைக்கும் துயரத்திற்கும் ஆளானார்கள். ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே 19 வரை 1,87,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிஞ்சுக் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், நோயாளிகள், வயது முதிர்ந்தோர் எவரையும் விட்டு வைக்கவில்லை சிங்கள இராணுவ பூதம். 

ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவின் விசாரணை அறிக்கையே இந்தப் படுகொலைகளைச் சாட்சியங்களோடு வெளியிட்டு இருக்கின்றது. ஆனால், உலகத்தின் மனசாட்சி இன்னமும் விழிக்கவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சிலில் நீதி புதைக்கப்பட்டது. இதற்குப் பிரதான காரணங்களுள் ஒன்று, அங்கு இந்திய அரசு செய்த துரோகம். 

இன்றும் ஈழத்தில் கொடுமை தொடர்கிறது. ஈழத்தமிழ் இனத்தையே கரு அறுக்கும் நோக்கோடு பல்வேறு பயங்கரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழர் தாயகத்தில் சிங்களர் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. வடக்கு மாகாண சபையின் முதல்அமைச்சர் விக்னேஸ்வரன் இந்த உண்மைகளை உரக்கக் கூறியதோடு, ஈழத்தமிழ் இனப்படுகொலைக்குப் பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும்; சிங்களர் இராணுவம் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும்; கொடுஞ்சிறைகளில் வாடும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றினார். 

தற்போதைய மனித உரிமைக் கவுன்சிலின் அல்ராட் உசேன், நடுநிலை தவறி, சிங்கள இனவாதக் கொடுமைக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். 2011 ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் மாநாட்டில், சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு; ஐ.நா. மன்றத்தின் கடமை, ஈழத்தமிழர் தாயகத்தில் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான். அந்த வாக்கெடுப்பில், புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் முழங்கியதை, அம்மாநாட்டின் அனைத்துப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். அதற்குப் பின்னரே பொது வாக்கெடுப்பு என்ற தீர்வை உலகத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் எழுப்பலாயினர்.

இந்து மகா சமுத்திரம் என்றும், வங்காளக் குடாக் கடல் என்றும் அழைக்கப்படும் தமிழர் பெருங்கடலின் அலைகள் மோதும் கண்ணகி சிலை அருகே, தன்மானத் தமிழ்க்குலம் மே 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் மக்கள் கடலாய்த் திரள வேண்டும் என மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

சுதந்திரத் தமிழ் ஈழமே எங்கள் இலக்கு; பொது வாக்கெடுப்பே எங்கள் கோரிக்கை என்ற உணர்வை நெஞ்சில் ஏந்தியவர்களாக, ஈழ விடுதலைப் போரில் மடிந்த மாவீரர்களுக்கும், பலியான தமிழர்களுக்கும், வீர வணக்கம் செலுத்தவும், உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பவும், தமிழ் உணர்வாளர்களும், இளம் தலைமுறையினரும், மாணவச் செல்வங்களும், தாய்மார்களும், கடமை ஆற்ற வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.

ad

ad