இலங்கையில் உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பாக, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல் பொறிமுறை நம்பகமானது என்பதை இலங்கையில் உள்ள சமூகங்கள் மத்தியில் உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலக பங்களிப்பு அவசியம்.
இதனை நாம் இலங்கை பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மூலமாகவும் வலியுறுத்தி வருகிறோம்.
இந்தச் செய்தி மதிக்கப்படும் என்று நம்புகிறோம். பிரித்தானிய அரசாங்கம் எப்போதுமே, பொறுப்புக்கூறல் பொறிமுறை நம்பகமானதாக, அனைத்துலக தரம்வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதை வரவேற்றும் அதேவேளை, இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு சந்தர்ப்பங்களிலும், வலியுறுத்தி வருகிறோம்” என்றும் தெரிவித்தார்