புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2016

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள்-கூட்டமைப்பு விடாப்பிடி

போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு கட்டாயம் இருக்கவேண்டும். எமது இந்த நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் விரைவில் தெரிவிக்கவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா  தெரிவித்துள்ளார்.

   
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த வாய்மொழி மூல அறிக்கையில் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை வலியுறுத்தியிருந்தார். அதேவேளை, அதன் பின்னர் கருத்து வெளியிட்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிராகரிக்கவில்லை என்ற தொனியில் கூறியிருந்தார். ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழிமூல அறிக்கைக்கும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ளார்.

"கடந்த போர்க்காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்கு உள்நாட்டு நீதித்துறையின் செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளோ அல்லது சர்வதேச நீதித்துறை சார்ந்தவர்களோ தலையிடுவதற்கு நான் ஜனாதிபதிப் பதவியில் இருக்கும்வரை ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்'' என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  தெரிவித்துள்ளதாவது

"இலங்கையில் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு கட்டாயம் இருக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றது. 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு, சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையில் போர்க்குற்ற விசாரணை உள்நாட்டில் நடக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன்தான் கடந்த வருடம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். இதற்கு மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அமைச்சர்களோ கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கக்கூடாது.

நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமெனில், ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். வெளிநாட்டு, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு இலங்கையில் நடைபெறும் கலப்பு நீதிமன்ற விசாரணையில் இருக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கடந்த 29ஆம் திகதி இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள வாய்மொழி மூல அறிக்கையிலும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம். இதிலிருந்து பின்வாங்கமாட்டோம்; மாற்றத்தை ஏற்படுத்தமாட்டோம்.

ஏனெனில், சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பில்லாத உள்நாட்டு விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எமது இந்த நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு விரைவில் தெரிவிக்கவுள்ளோம். இதற்கு முன்னர் எமது இந்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒன்றுகூடி பேச்சு நடத்தவுள்ளன. இந்தப் பேச்சு ஓரிரு தினங்களில் நடைபெறும். இதன் பின்னரே ஐ.நாவுக்கு கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடிதம் மூலம் தெரிவிக்கவுள்ளோம்'' - என்று கூறியுள்ளார்.

ad

ad