புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

இலங்கைத் தூதரை மலேசியாவில் இருந்து வெளியேற்றுக: வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’மனிதகுலத்தின் மனசாட்சியைப் பதற வைக்கும் விதத்தில் இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்களப் பேரினவாத அரசு கொன்று குவித்து மன்னிக்க முடியாத தமிழ் இனப் படுகொலையை நடத்தியது. காங்கிரஸ் தலைமை தாங்கிய இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முப்படைத் தளவாடங்களையும் கோடானுகோடிப் பணத்தையும் சிங்கள அரசுக்குத் தந்து தமிழ் இன அழிப்புப் போரை சிங்கள அரசுக்குப் பின்புலமாக இருந்து இயக்கியது. இலட்சக்கணக்கான பொதுமக்களோடு மாவீரர்களான விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். சிங்கள அரசால் கைது செய்யப்பட்ட 11000 விடுதலைப் புலிகளின் கதி என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.

தமிழ் இனப் படுகொலையை நடத்திய கொடியவன் மகிந்த ராஜபக்சே லண்டன் மா நகருக்கு வந்தபோது பிரித்தானியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவனது நிகழ்ச்சியை ரத்து செய்தது. வந்த சுவடு தெரியாமல் இலங்கைக்கு ஓடிப்போனான் ராஜபக்சே.

இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது என்னுடைய தலைமையில் 1200 பேர் மத்தியப் பிரதேசத்துக்கே சென்று அவனது வருகையை எதிர்த்து அறப்போர் நடத்தினோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி ஏற்பு விழாவுக்கு மாபாவி ராஜபக்சே வுக்கு அழைப்பு கொடுத்ததால், பதவி ஏற்பு நாளிலேயே எனது தலைமையில் மறுமலர்ச்சி திமுக கருப்புக் கொடி காட்டிக் கைதானோம்.

மலேசிய நாட்டின் கோலாலம்பூருக்கு கொலைகாரன் ராஜபக்சே ரகசியமாக வந்தபோது, அங்குள்ள தமிழ் அமைப்புகள் அவன் வருகையை எதிர்த்து அறப்போர் ஆர்ப்பாட்டம்
நடத்தினார்கள். மான உணர்ச்சி உள்ள தமிழ் இளைஞர்கள் மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதர் இப்ராகிம் சகீப் அன்சர் என்பவனிடம் ராஜபக்சே வருகை குறித்துத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தபோது விடுதலைப்புலிகளை அழித்தது போல் மலேசியாவிலும் அழிப்போம் என்று அகம்பாவத்தோடு பதில் சொன்னதால் கைகலப்பு ஏற்பட்டது.

மலேசிய அரசாங்கத்தின் காவல்துறை தலைமை அதிகாரி மலேசியாவில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் மிரட்டியுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக ஆதரவுக்குரல் எழுப்பும் ஈழத்தமிழ் இளைஞர்களை, விடுதலைப்புலிகள் என முத்திரை குத்தி நாடு கடத்தி இலங்கை அரசின் கொடுங்கரங்களில் மலேசிய அரசு ஒப்படைத்தது. தஞ்சம் கேட்டு வந்த ஈழத்தமிழ் அகதிகளையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது. இதற்குக் காரணமே மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதர் இப்ராகிம் சகீப் அன்சர்தான். இவர், இனக்கொலை செய்த இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரியாக இருந்தவர். இவர்தான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பினாங்கு மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டுக்கு உரிய அழைப்பின் பேரில் நான் சென்றபோது, எனக்கு விசா கொடுக்கக் கூடாது என்று முழுமூச்சாகச் செயல்பட்டார். அதன்பிறகு நான் உரிய விசா பெற்று நான் கோலாலம்பூர் சென்று இறங்கியபோது, அங்கிருந்து என்னைத் திருப்பி அனுப்புவதற்கும் கடுமையாக முயற்சித்தார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போரை எல்லாம் விடுதலைப்புலிகள் என்று குற்றம்சாட்டி ஒரு பொய்யான மாயத்தோற்றத்தை மலேசிய அரசு ஏற்படுத்துகிறது எனக் கூறி, அத்தகைய போக்கினைக் கடுமையாகக் கண்டித்து பினாங்கு துணை முதல்வர் உலகத் தமிழர் மையத்தின் தலைவர் பேராசிரியர் இராமசாமி அறிவித்து இருக்கிறார்.

தமிழ் இனத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்சரை, மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இக்கருத்தை வரவேற்று ஆதரிக்கிறேன் என அறிக்கையில் கூறினார்.

ad

ad