தங்க தமிழ்ச்செல்வன்
டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் இருவரும் நேற்று தலைமைச் செயலகம் சென்றனர். பொதுப்பணித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி அதிகாரிகளிடம் புகார் அளிக்க முயன்றனர். ஆனால், அவர்களை தலைமைச் செயலகத்தின் உள்ளே விட போலீஸார் அனுமதி மறுக்கவே, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இருவரும் அனுமதியின்றி உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இவர்கள் இருவர் மீதும் சென்னை கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட இரு பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வழக்கை அடுத்து விரைவில் அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கையடுத்து வெற்றிவேல் தலைமறைவாகியுள்ளார் எனப் போலீஸார் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.