இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு உதவும் நோக்கில் கறுப்புப் பணத்தை சட்டபூர்வ பாவனைக்கு உகந்த பணமாக
மாற்றுதல் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் போஷிக் கும் இடமாக தெஹிவளையில் உள்ள தனியார் உயர் கல்வி நிறுவனம் காணப்படுகின்றது.
அந்தக் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடின் எம்முடைய உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் விடுவிக்கப்பட்ட பின்னர் முதற்தடவையாக நேற்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது :
சவுதி அரேபியாவின் புலனாய்வுப் பிரிவு முகவர்கள் இலங்கையில் வஹாபிஸத்தை விதைக்கும் நோக்கில் பிரத்தியேக செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலே ஒரு தலைவரை உருவாக்க மாட்டோம்.பல தலைவர்களை உருவாக்குவோம் என்று குறிப்பிடுகின்றார்கள். அதன்படி வஹாபிஸம் சார்ந்த 50 அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஒரு பிரிவு எனும் அதேவேளை இதில் கல்வி நடவடிக்கைகள் சார்ந்த நிறுவனங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
தெஹிவளையில் தலைமைக் காரியாலயத்தை மேற்குறித்த தனியார் உயர் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்ற சுமார் 200 முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு வஹாபிஸம் போதிக்கப்பட்ட அடிப்படைவாதிகள் 3000 பேர்வரையில் நாட்டில் உள்ளனர்.ஒரு சிறு குறுந்தகவலின் மூலம் இந்த 3000 பேரையும் விரைவாக ஓரிடத்தில் திரட்ட முடியும்.
இவையனைத்தையும் எனக்குக் கிடைக்கப்பெற்ற நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களின் அடிப்படையிலேயே குறிப்பிடுகின்றேன்.
வஹாபிஸம் என்பது பாகிஸ்தானிலும்,ஆப்கானிஸ்தானிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் போதிக்கப்படுவதாகவும் வலுவூட்டப்படுவதாகவும் நாங்கள் கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போது அவுஸ்திரேலியா ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிலேயே இந்த அடிப்படைவாதப் போதனைகள் பயிற்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் கிழக்கிலே இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரசாரங்களை முன்னெடுத்த குறித்த கல்வி நிறுவன உரிமையாளர் வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்வதற்கு முன்னர் இன்றைய தினத்திற்குள் கைது செய்ய வேண்டும். அதேபோன்று அவரால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சியையும் தடை செய்ய வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டுக்கொள்கின்றோம்