நாட்டை பிளவுபடுத்துவதோ, குந்தகம் ஏற்படுத்துவதோ எமது நோக்கமல்ல! தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து சம்பந்தன்!
நாங்கள் மக்கள் மத்தியில் ஒருபோதும் தவறான கருத்துக்களை விதைக்கவில்லை. எமது தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலோ, நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலோ அமையவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வை முன்னிறுத்தி எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. அதன் மூலம் மக்களின் ஆணையைக் கோரி நிற்கின்றோம். அதற்குத் தவறான அர்த்தம் கற்பிக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முனையக் கூடாது என்றும் அவர் சொன்னார்.
இலங்கையில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள சம்பந்தனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் சம்பந்தனிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கின் தேர்தல் நிலைமைகள் மற்றும் தென்பகுதி அரசியல்வாதிகள் கூட்ட மைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்,
அதிகாரப் பகிர்வுடன் வெவ்வேறு நாடுகளில் எவ்வாறு ஆட்சி நடைபெறுகின்றதோ அதன் அடிப்படையில் இங்கும் அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வொன்றின் அவசியம் குறித்தே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் விளக்கியுள்ளோம்.
மாறாக, நாட்டைப் பிரித்துக் கொடு என்று கூறவோ? அன்றேல் சட்டவிரோதமான கருத்துக்களை முன் வைக்கவோ இல்லை. இதனை அரசியல்வாதிகளே திரிபுபடுத்தி தென்பகுதி மக்களைக் குழப்பி வருகின்றனர்.
பெரும்பான்மை சிங்கள மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையல்ல. முறையாக அவர்களிடம் அதனை எடுத்துச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதனைவிடுத்து இவ்வாறு கருத்துக்களைத் திரிபுபடுத்திக் கூறுவதன் மூலமே இனப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பெருவாரியான மக்கள் எமது கருத்துக்களை ஆர்வத்துடன் செவிமடுத்து வருகின்றனர். இத்தடவை கணிசமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். மக்கள் சீராக வாக்களிக்காது போனால் அவர்களின் வாக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பாகப் போய்விடும்.
அதேவேளை, அமைதியான நேர்மையான தேர்தல் நடைபெறுவதையும் தேர்தல் திணைக்களம் உறுதி செய்ய வேண்டும். வடக்கில் தற்பொழுது சுமுகமான சூழல் நிலவுகின்றது. இந்த நிலைமை தொடர வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க எவரும் முனையக் கூடாது.
எவ்வாறெனினும் தேர்தல் சட்டமீறல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாகவும் அறியப்படுகின்றது.
அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை மக்களுக்கு கையளிக்கவுள்ளதாகவும், அதேபோன்று மக்களின் ஒருபகுதி காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளித்துவிட்டு வலிகாமம் பகுதியில் சென்;று முகாம் அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மக்களுக்கு வீடுகளை வழங்குவதும், அவர்களின் காணிகளை மீளக் கையளிப்பதும் வரவேற்க வேண்டிய விடயம். எனினும் இதனை தேர்தல் நோக்கோடு செய்வது அழகல்ல.
அதேவேளை, ஒரு பகுதியை விட்டு மறுபகுதியில் இராணுவம் குடியேறுவதன் மூலம் மக்களுக்கு எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை. அங்கும் மக்களுக்கு சொந்தமான காணிகளையே இராணுவம் நாட முனைகின்றது. இவ்வாறான நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் சொந்தக் காணியை முழுமையாக அவர்களிடம் ஒப் படைக்க முன்வர வேண்டும். ஒன்றிலிருந்து மாறி மற்றுமொன்றுக்கு செல்வதால் ஏதேனும் பயன் உண்டா என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.
இதேவேளை, தேர்தலை முன்னிட்டு அபிவிருத்திப் பணிகள் பலவற்றை வடக்கில் அரசாங்கம் முடுக்கிவிடவுள்ளதாகவும் கூற ப்படுகின்றது. இதன் ஒரு கட்டமாகவே ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரை புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதேபோன்று, வேலை வாய்ப்புக்கள், நிவாரணங்கள் என்பவற்றையும் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. தேர்தல் காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் எந்தளவு தூரம் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். வடக்கின் அபிவிருத்தியை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம்.
எனினும் இவை யாவும் வெளிநாட்டு உதவித் தொகையில் மேற்கொள்ளப்பட்டவையாகும். வெளிநாட்டு உதவியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கொண்டு அரசாங்கம் பயன் பெற முனைவது மக்களை ஏமாற்றும் செயலாகும். இதுவரை வடபகுதி மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டே வந்தன. தேர்தல் என்ற ஒரே காரணத்துக்காகவே இவை யாவும் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் மக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர்.
இவை அனைத்துக்கும் மேல், சுதந்திர தேர்தல் பொதுச் சேவைக்குழு ஒன்று இல்லாத சூழ்நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. எனவே வாக்களிக்கும், வாக்கு எண்ணும் செயற்பாடுகளில் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகவே உள்ளன. தேர்தல் கடமைகளில் அரசாங்கத்தினால் நியமிக்கப் படும் அரச ஊழியர்கள் சேவையில் ஈடுபடவுள்ளனர். இதனால் தேர்தல் என்பது கேள்விக்குறியாகவே அமையும் என்று நாம் அஞ்சுகின்றோம்.
எனவே, பக்கச்சார்பற்ற அரச அதிகாரிக ளைச் சேவையில் அமர்த்தி தேர்தல் சட்ட விதிகளுக்கமைய நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களம் முன்வரவேண்டும். வாக்களிக்கும் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் கடமையாற்றுவோரின் செயற்பாடுகளின் வாயிலாகவே நேர்மையான தேர்தலை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர் களும் தேர்தல் ஆரம்பம் முதல் முடிவு வரை தமது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். தேர்தல் குளறுபடிகள் இடம்பெறுமானால் அது ஒரு போதும் ஜனநாயகத் தேர்தலுக்கு வழிச மைக்காது போகும்.
தேர்தல் தொடர்பில் பல்வேறு விடயங் களை நாம் அறிந்து வருகின்றோம். எதிர் வரும் நாட்களில் அமைச்சர்கள் சிலர் வட பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்து தேர் தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வாறிருப்பினும் முறை யான தேர்தல் ஒன்றுக்கு வழிவகுப்பது சகல தரப்பினரதும் கடப்பாடாகும். அதன் மூலமே மக்கள் மத்தியில் உள்ள அச்சத் தைப் போக்கக் கூடியதாக இருக்கும் என் றும் அவர் தெரிவித்தார்.