ஜெயலலிதா நடவடிக்கையில் சட்டமீறல் இல்லை! மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை குறைக்க கோரிய வழக்கில் அவர்கள் சார்பில் ஆஜரானவர் ராம் ஜெத்மலானி.
இந்நிலையில் ராம் ஜெத்மலானி இன்று சென்னை வந்தார். அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம் ஜெத்மலானியிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை பற்றி கேட்ட போது, இதில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்றார்.
அவர் மேலும் கூறுகையில், இவ்விடுதலையை எதிர்க்கும் மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும் என்றும், விடுதலை செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை மட்டுமே விதித்துள்ளது என்றும் தெரிவித்தார்.