புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014

அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் பெண்கள்: பரோக்கள் என்ற பெயரில் சமூகத்தில் உலாவும் நிலை
ராஜஸ்தான் மாநிலங்களில் இளம் பெண்கள், ஆடு, மாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருகிறது.
பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள்.
மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள்.
சிறுமி, வயதுக்கு வந்த பெண், இளம் பெண் என்று வயதிற்கேற்றபடி விலை நிர்ணயிக்கிறார்கள்.
இந்த விற்பனை நேரடியாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ நடக்கிறது. வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால்கூட சிலர் விற்றுவிடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் ‘இங்கு வறுமையில் வாடுகிறார்கள். அங்கு போயாவது நன்றாக சாப்பிட்டு வசதியாக வாழட்டும்' என்கிறார்கள்.
இப்படி சந்தையில் வாங்கப்படும் சிறுமிகளை பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைக்காக பயன்படுத்துகிறார்கள். சம்பளம் தர தேவையில்லை. மனைவி இல்லாதவர்கள் மனைவியாக வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் மனைவிக்குரிய எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. சமூக அந்தஸ்தும் கிடையாது.
இப்படி வாங்கி பயன்படுத்தப்படும் பெண்களை ‘பாரோ’ என்றழைக்கிறார்கள். இந்தப் பாரோக்களை ஒருவர் பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அவர்கள் ஜென்மம் முழுக்க அடிமைகளாகிவிடுகிறார்கள்.
முதலாளி என்ன வேலை சொன்னாலும் செய்யவேண்டும். சரியாக வேலை செய்யாத பாரோக்கள் சவுக்கடி வாங்குவதும் சகஜம்.
ஒருவர் தனது செல்வ நிலைக்கேற்ப எத்தனை பாரோக்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பல பெண்களை விலைக்கு வாங்கி, வேலைக்கு பயன்படுத்துகிறார்கள்.
தன்னிடம் வேலை இல்லாதபோது மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள்.
இந்த பாரோக்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால், அதுவும் எஜமானருக்கு சொந்தமான விற்பனை பொருள்தான். தாயிடம் இருந்து பிரித்து வேறுயாருக்காவது விற்றுவிடுவார்கள்.
முன்பு தேவதாசிகள் என்றொரு பிரிவு இருந்தது. அந்த வாழ்க்கை அவர்களுக்கு சோகமாக இருந்தாலும், அவர்கள் ஆடை, ஆபரணங்கள் அணிந்து ஆடம்பரமாகவும் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்க்கை அதைவிட மிகமோசம்.
பாரோக்கள் பெருமளவு சமூக விரோதிகளாலும், பணக்கார கிழவர்களாலும் வாங்கப்படுகிறார்கள். 70 வயது முதியவர்கூட 18 வயது பாரோவை வாங்கிச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்.
சிலர் பாரோக்களை வாங்கி, அதைவிட அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள். மனைவியை இழந்தவர்கள் மட்டுமல்ல, மனைவி இருப்பவர்களும் மனைவி சம்மதத்துடன் பாரோக்களை விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள்.
பாரோக்களின் மனக்குமுறல்:
கொல்கத்தாவில் வசிக்கும் மெகரம்:
ஆடு, மாடுகளைவிட கேவலமான வாழ்க்கை எங்களுடையது. பலமுறை வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சித்தேன். தேடி கண்டுபிடிக்கப்பட்டு கால் எலும்பு முறியும் வரை அடித்து தீர்த்துவிட்டார்கள். அந்த அடிக்கு பயந்து மறுபடியும் ஓட முயற்சிக்கவில்லை.
குழந்தை பிறந்ததும் இருக்கும் மவுசையும் இழந்துவிடுவோம். குழந்தையையும் விற்றுவிடுவார்கள்.
அசாமில் வசிக்கும் மரியம்:
என்னை மூன்று முறை விற்றுவிட்டார்கள். கடைசியாக ஒரு கண்ணில்லாத 70 வயது கிழவனுக்கு என்னை விற்றார்கள். அந்தக் கிழவர் என்னை திருமணம் செய்துகொண்டார்.
வீட்டு வேலைகளைப் பார்த்துவிட்டு, வெளியே வேலைக்கும் போகிறேன். கிழவரையும் கவனித்துக் கொள்கிறேன். அவருடைய மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். சில சமயம் மகள் வீட்டிற்கும் என்னை வேலைக்கு அனுப்பிவைப்பார்.
அவருடைய மகளைவிட என் வயது குறைவு. அதைப் பற்றியெல்லாம் அந்த கிழவர் கவலைப் படுவதில்லை.
ஐதராபாத்தில் வசிக்கும் கவுசியா:
35 ஆண்டுகளில் இரண்டு முறை விற்கப்பட்டேன். என் மகளை திருமணம் செய்துகொடுத்தேன். பாரோவின் பெண் என்பதால் இரண்டாம் தார வாழ்க்கைதான் அவளுக்கு கிடைத்திருக்கிறது.
பாரோவின் பெண் என்று மாமியார் அவளை கேவலமாக பேசுகிறார்.
அவளது கணவன் கையாலாகாதவன். யாரும் பெண் கொடுக்காத காரணத்தால் என் பெண்ணை கேட்டு வந்தார்கள். மனைவி என்ற அந்தஸ்து என் மகளுக்காவது கிடைக்கட்டும் என்றெண்ணி திருமணம் செய்து வைத்தேன்.
இந்த சமூகம் திருந்தாது. என்னை ஒரு மாமியாராகவும் மதிப்பதில்லை. சம்பந்தி என்ற அந்தஸ்தும் தரவில்லை. ‘உன் மகளை கண்டித்துவை. சொந்த பந்தங்கள் நடுவே உட்கார்ந்து பேசுகிறாள் என்கிறார்கள். எங்கே என் மகளை விரட்டி விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்துகொண்டிருக்கிறது.
கொல்கத்தாவில் வசிக்கும் முஸ்கான்:
நான் கொல்கத்தாவிலிருந்து பீகாருக்கு விற்கப்பட்டேன், எனக்கு மீன் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் வந்து சேர்ந்த இடத்தில் சுத்த சைவம். மீனை கண்ணால்கூட பார்க்க மாட்டார்கள்.
மீன் சாப்பிட நாக்கு தவியாய் தவிக்கும். ஆனால் அனுமதி கிடையாது. ஒருமுறை அவர்களுக்குத் தெரியாமல் மீன் சாப்பிட்டுவிட்டேன் என்பதற்காக ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறி என்னை உயிரோடு எரித்துவிட முயற்சி செய்தார்கள்.
நான் இருமுறை விற்கப்பட்டவள், மூன்றாவது முறையும் விற்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வயதாகிவிட்டால் வீட்டை விட்டே துரத்தி விடுவார்கள். எங்காவது போய் பிச்சை எடுத்துதான் பிழைக்கவேண்டும்.
பீகாரில் வசிக்கும் ரேஷ்மா:
நான் வித்தை காட்டும் ஒரு குடும்பத்தினரால் திருமணம் என்ற பெயரில் வாங்கப்பட்டேன். அவர்களுக்காக நிறைய சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன்.
என் கணவரோடு பிறந்தவர்கள் ஏழு ஆண்கள். சொன்னால் வெட்கக்கேடு, எனக்கு பிறந்த குழந்தைகளில் எது என் கணவருடையது என்று எனக்குத் தெரியாது என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.

ad

ad