புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2015

மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை! ஜெ.வழக்கறிஞர் சொல்கிறார்

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடங்கியது பெங்களூரு நீதிமன்றம்.
நீதிபதி: விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடினீர்களா?

வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ்: இவர்களுக்குத்தான் பொங்கல் திருவிழா. அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடியதாகச் சொன்னார்கள்.  
நீதிபதி: இன்று என்ன வாதிட இருக்கிறீர்கள்?
நாகேஸ்வர ராவ்: கட்டட மதிப்பீடு பற்றி எனது வாதங்களை வைக்க இருக்கிறேன்.
நீதிபதிஉச்ச நீதிமன்றம் கொடுத்த பெயில் ஆர்டரைக் கொடுங்கள்.
(ஆர்டர் நகலை வழக்கறிஞர் கொடுத்தார். நீதிபதி படித்துக் கொண்டிருந்தார்.)
நாகேஸ்வர ராவ்: உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைதான் செய்திருக்கிறது. எனவே வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவுமில்லை.
(நீதிபதி அதை கேட்டு மௌனமாக இருந்தார்.)
ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டது தவறு!
நாகேஸ்வர ராவ்: என் மனுதாரர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் 1996-ல் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை செய்து தங்க, வைர ஆபரணங்களைக் கைப்பற்றினர். அப்போது என் மனுதாரர் வீட்டில் இல்லை.
நீதிபதி: (பவானி சிங்கை பார்த்து) ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடந்தபோது அவர் இருந்தாரா?
பவானி சிங்: இல்லை.
நீதிபதி: ஒரு குற்றவாளி சிறையில் இருக்கும்போது அவரது வீட்டை எப்படி சோதனை செய்தீர்கள்? முறையாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அவரை அழைத்துச் சென்று சோதனை செய்திருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை?
(பவானி சிங் தயக்கத்துடன் அன்பழகன் வழக்கறிஞர் குமரேசனைப் பார்த்தார்.)
குமரேசன்: முறையாக சென்னை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவிடம் பெர்மிஷன் வாங்கினார்கள். தன்னுடைய பிரதிநிதியாக பாஸ்கரனை ஜெயலலிதா நியமித்தார். அதன்படி பாஸ்கரனை அழைத்துப் போய் அவருடைய கண்ணெதிரேதான் சோதனை செய்யப்பட்டது.
நீதிபதி: ஜெயலலிதா கையெழுத்து போட்டு கொடுத்த பெர்மிஷன் கடிதம் இருக்கிறதா?
குமரேசன்: இருக்கிறது.
நீதிபதி: அந்தக் கடிதத்தைக் காட்டுங்கள்.
குமரேசன்: (அந்தக் கடிதத்தை நீண்ட நேரம் தேடியபடி இருந்தார்.)
நீதிபதி: இந்திய நடைமுறைச் சட்டத்தில் குற்றவாளி சிறையில் இருக்கும்போது அவருடைய கையெழுத்தை வாங்கி அவருடைய வீட்டை பரிசோதனை செய்யலாம் என்று சட்டத்தில் இடம் இருக்கிறதா... இல்லையே. அது மிகவும் தவறுதானே!''
தமிழர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்!
நாகேஸ்வர ராவ்: ஜெயலலிதா 88 - 91 வரை எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும் இருந்தார். அதன் பிறகு 91-  96 வரையில் தமிழகத்தின் முதல்வரானார். அவர் 91 - 96 முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 18-9-96-ல் முதல் எஃப்.ஐ.ஆர் போட்டார்கள். அதையடுத்து 88 - 91 எம்.எல்.ஏவாவும், எம்.பியாகவும் இருந்த காலகட்டத்திலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லி மீண்டும் இரண்டாவது முறையாக 15-2-97-ல் ஒரு எஃப்.ஐ.ஆர்., போட்டார்கள். பிறகு இரண்டாவதாகப் போடப்பட்ட எஃப்.ஐ.ஆரைத் திரும்பப் பெறப்பட்டது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா 1991-ல் முதல் முறையாக முதல்வரானார். தன்னுடைய 44-வது பிறந்தநாள் 1992-ல் பிப்ரவரி மாதத்தில் வந்தது. அப்போது கட்சித் தொண்டர்கள் அவர் பிறந்த நாளுக்காகப் பரிசுப் பொருட்களாக தங்க, வெள்ளிப் பொருட்களைக் கொடுத்ததோடு ரொக்கமாகவும் ஒன்றரை கோடி கொடுத்தார்கள். அதன் பிறகு ஜெயலலிதா தன் பிறந்த நாளுக்கு பரிசுகள் கொடுக்கக் கூடாது. நலத்திட்ட உதவிகளையும், ஏழை, எளிய அநாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிவித்ததை அடுத்து நலத்திட்ட உதவிகள் செய்தார்கள். என் கட்சிக்காரருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களைக்கூட வருமானத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
அரசு வழக்கறிஞர் மராடி: (குறுக்கிட்டு) பொது ஊழியர்களாக இருப்பவர்கள் பதவியில் இருக்கும்போது கிடைக்கும் பரிசுப் பொருட்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது. அதை அரசு கருவூலத்தில்தான் வைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதால்தான் வருமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நீதிபதி: அரசியல்வாதிகளுக்கு ஏன் பரிசுப் பொருட்கள் கொடுக்கிறார்கள்?
நாகேஸ்வர ராவ்: தென்னிந்தியாவில் தமிழர்கள் வேறுபட்ட குணம் உடையவர்கள். மிகுந்த உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தான் விரும்பும் தலைவர்களை மிகவும் நேசிக்கக் கூடியவர்கள். உதாரணத்துக்கு ரஜினிகாந்த் பிறந்த நாளின்போதும், அவருடைய சினிமா வெளியீட்டின்போதும் பல்லாயிரம் பேர் சேர்ந்து விழா எடுத்து பாராட்டுவதைப் பார்க்கலாம். அதேபோல ஜெயலலிதா மீது தீவிர அன்புகொண்டவர்கள். இந்த வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது 300-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.
நீதிபதி: தி.மு.கவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மீது வழக்கு எதுவும் இல்லையா?
ஜெ.வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன்: தி.மு.க தலைவர் கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷன் இருந்தது.
பவானிசிங்: இதற்கு கர்நாடகாவே பரவாயில்லை.
ஏன் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா முதல்வராகவில்லை?
நாகேஸ்வர ராவ்: ஜெயலலிதா வீட்டில் 1,116 கிலோ வெள்ளி இருந்ததாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கைப்பற்றினார்கள். இது அனைத்தும் வழக்கு காலகட்டமான 1991-  96 முன்பே வாங்கப்பட்டதால் நீதிமன்றத்தில் கணக்கு காட்ட வேண்டியதில்லை. இந்த வெள்ளிப் பொருட்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பரிசாகக் கொடுத்த வெள்ளிக் கிரீடம், வெள்ளிச் செங்கோல் போன்ற பொருட்களும் அடங்கும்.  
நீதிபதி: எம்.ஜி.ஆர்., பிரபலமான நடிகர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் பிரபலமான தலைவர்களும்கூட. அண்ணாதுரை திராவிடக் கட்சியின் நிறுவனர். எம்.ஜி.ஆர்.,  அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்து தேர்தலைச் சந்தித்தவர், என்பதையெல்லாம் நான் படித்திருக்கிறேன். அது திராவிட வரலாறு. எம்.ஜி.ஆர். எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
குமார்: 10 வருடங்கள் முதல்வராக இருந்தார்.
நீதிபதி: அதன் பிறகுதான் ஜெயலலிதா முதல்வரானாரா?
குமார்: இல்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
நீதிபதி: ஏன் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா முதல்வராக முடியவில்லை? எம்.ஜி.ஆர்., இறந்ததும், அந்த அனுதாப அலையில் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கலாமே?
குமார்: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு வந்த தேர்தலில் அ.தி.மு.க., அணி இரண்டாகப் பிரிந்து எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி  ஓர் அணியாகவும், ஜெயலலிதா மற்றோர்  அணியாகவும் நின்றதால் தேர்தல் முடிவு மாறிவிட்டது.
வாட்ச் கணக்கில் சேர்க்க வேண்டாம்!
நாகேஸ்வர ராவ்: ஜெயலலிதா வழக்கின் காலகட்டத்துக்கு முன்பே தங்க, வைர கற்கள் பொதித்த காஸ்ட்லி வாட்ச்கள் 7 இருந்தன. இதன் மதிப்பீட்டில் குளறுபடி இருக்கிறது. அதேவேளையில் தனி நபர் அணியும் பொருட்களுக்கு வருமானவரித் துறை விதிவிலக்கு அளித்திருக்கிறது என்பதால் சொத்து பட்டியலில் சேர்க்கக் கூடாது. இதேபோல பல பொருட்கள் விதிகளுக்குப் புறம்பாக சொத்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  
நீதிபதி: இது வருமானவரித் துறை வழக்கல்ல. ஊழல் தடுப்பு போலீஸார் பதிவு செய்யப்பட்ட வழக்கு.
நாகேஸ்வர ராவ்: தனிநபர் அணியும் பொருட்களுக்கு வருமானவரித் துறை விதிவிலக்கு அளித்திருக்கிறது. அதனால் வருமானவரிதான் இதை சொத்துப் பட்டியலில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும்.
ஜெயலலிதா அ.தி.மு.க., கட்சியின் பொதுச் செயலாளர் என்பதால் அவருடைய பெயரில் பல வாகனங்கள் வாங்கப்பட்டன. அதையும் இவருடைய சொத்துப் பட்டியலில் சேர்த்திருப்பது தவறு.  வாதங்கள் தொடர்கின்றன.

ad

ad