புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2016

திலீபன் மகேந்திரன்களுக்கு ஒரு திறந்த மடல்! - கவிஞர் தாமரை

ந்த இரண்டு வாரங்களாக, தம்பி திலீபன் மகேந்திரன் இந்திய தேசியக் கொடியை எரித்த விவகாரமும் அதன் பின்விளைவுகளும் செய்திகளை
ஆக்கிரமித்து வருவதைப் பார்க்கிறேன். 
 
முகநூலில், தம்பி கொடியை எரிக்கும் புகைப்படத்தை அப்பட்டமாக வெளியிட்டு, ‘தமிழ்த்தேசியவாதிகளுக்கு’ அறைகூவல் விடுத்திருந்ததையும் அப்போதே கவனித்துக் கவலையுற்றேன். எனினும் அதற்காக நான் எந்தப் பதிவும் இடவில்லை, யாரையும் அழைத்து எச்சரிக்கை செய்யவுமில்லை.  எதற்காகவும் இனி அரசியல் பதிவுகள் இடுவதில்லை, அரசியல் களத்தில் நிற்பதில்லை, அரசியல் பேசுவதில்லை என்று நான் எடுத்த கடுமையான நிலைப்பாடு காரணமாக மௌனமாகக் கடந்து விட்டேன்.

ஆனால் சில தினங்களாக இந்த விவகாரம் தொடர்பாக வெளிவரும் செய்திகள்,  என்னை என் நிலைப்பாட்டிலிருந்து சற்றே தளரச் செய்து விட்டன.  சில செய்திகளைக் கூறவேண்டிய நேரத்தில் கூறாமல் போவதும் தவறானதே!. ஒரு பொதுநல நோக்கோடு சில செய்திகளைக் கூற விழைகிறேன்.

 தம்பி மகேந்திரன்,  கொடியை எரித்தது இந்திய தேசியத்தின் மீதிருக்கும் கடுமையான வெறுப்புக் காரணமாக என்று தெரிகிறது.  அவர் ‘திராவிட தேசிய’த்தவர் என்பதும் ‘தமிழ்த்தேசிய’த்துடன் கடுமையான மோதலில் இருக்கிறார் என்பதும் புரிகிறது.  

இந்த இடத்தில் சில சம்பவங்களை நினைவுகூர வேண்டிய அவசியமிருப்பதாகக் கருதுகிறேன்.  

2009 ல் ஈழப்போர்ச் சூழலில் , அப்போதைய தமிழ்த்தேசிய விடுதலை இயக்க உறுப்பினர்கள் (அவர்களுடன் கூட்டணியில் இருந்த இன்னும் மூன்று இயக்கங்களுடன் ) இதேபோல் இந்திய தேசியக் கொடியை எரிக்க முடிவு செய்து கோவை, தஞ்சை, ஈரோடு, சென்னை ஆகிய நான்கு இடங்களில் எரித்துக் கைதாயினர்.  

அந்த இயக்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர் தியாகு.  இந்தியக்கொடி எரிப்புப் போராட்டத்திற்குப் பெரிய ஆதரவு இயக்கத்துக்குள்ளேயே இல்லாத நிலையில், எரித்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தவர் தியாகு.  பல மாவட்டங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ளாத நிலையில், மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் மட்டும் எரித்தனர்.  மொத்தமாகக் கைதானவர்கள் 15 பேர்.  சென்னையில் -1, கோவையில் - 5, தஞ்சையில் - 5, ஈரோட்டில் - 4. 

இதில் சென்னை, தஞ்சை, ஈரோடு ஆகிய மாவட்டத்தினர் கடுமையான நிபந்தனைகளின்றிப் பிணையில் வெளிவந்து விட்டனர். கோவையில் மட்டும் வெளிவர விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன தெரியுமா ?. 

கொடியை எரித்தவர்கள் ஒரு வாரம் தொடர்ந்து தத்தம் வீட்டின் முன் இந்தியதேசியக் கொடியைக் கம்பத்தில் ஏற்றி சல்யூட் அடிக்க வேண்டும் என்பது! 

இந்த நிபந்தனையை ஏற்று வெளியே வந்து, ஒரு வாரம் இந்தியக் கொடியைத் தத்தம் வீடுகளில் ஏற்றி சல்யூட் அடித்தவர்கள் மூவர். இதில் தேவேந்திரன், குணசேகரன் இருவரும் தியாகுவின் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தினர். 

இது இவ்வாறு இருக்க, மூன்றாண்டுகளுக்குப் பிறகு, 2012 ல் குடியரசு தினத்தன்று, ‘இமயம்’ தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி !.

இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறதா என்பது போன்ற ஒரு விவாதம். அதற்கு நடுவராகத் தியாகு.  குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி அல்லவா ?. அரங்கமே இந்திய தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, பின்னணி, மேசை என எல்லா இடங்களிலும் இந்திய தேசியக் கொடி மின்னிக் கொண்டிருக்க, மையத்தில் அமர்ந்த தியாகு தன் சட்டையில் ஒரு ‘இந்திய தேசியக் கொடி’யைப் பெருமிதமாகக் குத்திக் கொண்டு, முகமெல்லாம் புன்னகையாக, ‘இந்தியாவின் வளர்ச்சி’ பற்றிப் பிளந்து கட்டினார். 

யதேச்சையாகக் கண்ணுற்ற சில தோழர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.  அதில் சிலர் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்து, மற்ற தோழர்களுக்குத் தெரிவித்தனர்.  அந்த ‘திரைச்சட்டகம்’ (screen shot) இணையத்திலும் வந்து விட்டது.  [பார்க்க : படம்].
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்திற்குள்,  தியாகுவின் இந்த நடத்தை கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியது.
தியாகு வழக்கம் போல் தன் நாவன்மையால் தன் செயலைப் பலவகையில் நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். ( மாதிரிக்கு ஒன்று : “அந்தக் கொடி குத்தியிராவிட்டால் நான் அன்று நிகழ்ச்சி நடத்தியிருக்க முடியாது” ). ஆனால் உறுப்பினர்கள் அவற்றை ஏற்க மறுத்துக் கடுமையாக எதிர்த்தடித்தனர். எதிர்ப்பு வலுப்பதைக் கண்ட தியாகு இறுதியில் பணிந்து, தன் ‘வருத்தத்தை’ சம்பிரதாயமாகத் தெரிவித்துக் கொண்டார் - நான்கு சுவர்களுக்குள் !. 

ஆனால் அதற்கு ஓராண்டு முன்பிலிருந்தே ‘விநோத’மாக நடந்து கொண்ட தியாகு, உச்சக்கட்டமாக, 2012 மே 12 -ம் தேதி வீட்டை விட்டு ஓடிப் போனார்.  மே மாத ஆரம்பத்தில் அவரது இயக்க உறுப்பினர்களால் அமைக்கப்பட்ட ‘விசாரணைக் குழு’ சென்னை வந்து பல்வேறு தரப்பினரையும் கண்டு பேசி, பல உண்மைகளை உறுதிப்படுத்திக் கொண்டது.  அதன் தொடர்ச்சியாகத் தங்கள் பொதுப்பேரவையைக் கூட்டி, அவர் மேலான குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக விவாதித்து, அவரை இயக்கத்தை விட்டு நீக்கினர்.  27.5.12ல் நடைபெற்ற பொதுப்பேரவையின் தீர்மானம், இந்திய தேசியக் கொடி அணிந்து பெருமையாகத் தொலைக்காட்சியில் தியாகு தோன்றியது தொடர்பானது !.  [ பார்க்க : ஆவணம் ].

தலைவர் தியாகு, தொண்டர்களால் இயக்கத்திலிருந்து ‘நீக்கப்பட்ட’ செய்தி அப்போது பரவலாகத் தமிழ், திராவிட மற்றும் ஊடக வட்டாரங்களுக்கு அனுப்பப்பட்டது. 

 அந்தக் காலகட்டத்தில் இவர் ஓடிப் போனதற்கு / நீக்கப்பட்டதற்கு வேறு ‘சுவையான’ காரணங்கள் இருந்ததால் அவையே பெரிதாகப் பேசப்பட்டனவே ஒழிய, இந்தத் ‘தேசியக்கொடி எரிப்பு/ஏற்பு’ அப்படியே மறக்கடிக்கப்பட்டு விட்டது.

 தியாகு இந்தியக்கொடி அணிந்து, இமயம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தியது அப்போது எனக்குத் தெரியாது.  யதேச்சையாக வீட்டில் இவரது சட்டைகளுக்கிடையே இந்திய தேசியக் கொடிப்பட்டையைக் கண்டு குழம்பிப் போனேன், ‘நம் வீட்டில் இதற்கு வாய்ப்பு இல்லையே’ என்று !. தியாகுவிடம் கேட்டபோது, எந்தச் சலனமும் பதற்றமுமின்றி சொன்னார், “சமரன் பள்ளியில் குத்தி விட்டிருப்பார்கள்” என்று.  சிறுவன் சமரனிடம் உடனே கேட்டேன், “பள்ளியில் கொடி குத்திவிட்டார்களா கண்ணா?”. 

“இல்லையே” என்று சொல்லிவிட்டு விளையாட ஓடிப் போனான் குழந்தை. எனக்கு அப்போது குழப்பம் என்றாலும், நின்று நிதானித்து ஆராய்ந்து கொண்டிருக்க நேரமிருக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.

பின்னாளில் எல்லோருக்கும் தெரியவந்து, இயக்கத் தரப்பிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்த போதுதான் தெரிந்து கொண்டேன். அதிர்ச்சி அடைந்தேன்.  ‘இருக்கவே இருக்காது’ என்று முதலில் மறுத்து விட்டேன்.  ஏனென்றால் எங்களையெல்லாம் சுதந்திரதினம், குடியரசு தினங்களுக்குக் கறுப்புக் கொடி குத்திக் கொள்ள வலியுறுத்துபவராயிற்றே !.  புகைப்பட ஆதாரத்துடன் என்னிடம் நிரூபித்த பிறகே நம்பினேன்.  அன்றுதான் புரிந்து கொண்டேன், கண் மறைப்புப் போட்ட குதிரையாய், வேறெதையும் கவனிக்காமல் இவர் காட்டிய பாதை வழியே ஓடிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதும், ஓட்டத்தின் முடிவில் காத்திருந்தது மரணப் பள்ளத்தாக்கு என்பதும் !.

இப்போது நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியத் தேசியக்கொடி எரிப்பு சம்பவம் நடந்துள்ளது.  நாளையும் எவரேனும் எரிக்க முற்படுவார்கள். 

இந்தக் கொடி எரிப்புகளால் ஆவது என்ன ?.
 
தம்பி திலீபன் மகேந்திரா...! 

மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்தது உனக்குத் தெரியுமா ?.  உனக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் நீ சார்ந்த இயக்கக் குழுமம், வட்டாரங்கள், ஊடகங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.  அவர்கள் யாராவது இதற்குக் கண்டனம் தெரிவித்தனரா ? ஏதாவது விவாதம் நிகழ்ந்ததா ? இதன்மேல் ஓர் அறிக்கையாவது யாராவது வெளியிட்டனரா ? ஏன் செய்யவில்லை ? இது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின்’ உட்கட்சி விவகாரம் என்று கடந்து போய் விட்டார்களா  அல்லது நமக்கெதற்கு வம்பு என்று மௌனமாகப் பதுங்கிக் கொண்டார்களா ?

இது உட்கட்சி விவகாரம்தானா ?  இந்திய தேசியத்தைக் கடுமையாக எதிர்க்கும் தியாகு, இந்திய தேசியக்கொடியை எரிக்கத் தன் தொண்டர்களைத் தூண்டிய தியாகு, அதே இந்திய தேசியக் கொடியைச் சட்டையில் அணிந்து வெட்டவெளியில் காட்சி நிகழ்த்துவது உட்கட்சி விவகாரம்தானா தம்பி ?. 

அன்றே இந்த விவகாரம் அம்பலப்படுத்தப்பட்டு,  அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டிருந்தால் பல பேருக்குத் தெளிவு கிடைத்திருக்கும் அல்லவா ?  தலைவர்கள் பலர் மேடையில் பேசுவது ஒன்று, மேடைக்குப் பின்னால் செய்வது வேறொன்று என்று சில பேருக்காவது புரிந்திருக்கும் அல்லவா?. 
 
அப்பாவித் தொண்டர்களின் அரும்பான உணர்வுகளைத் தூண்டிப் பெரிதாக்கி, அவர்களை அபாயகரமான செயல்களைச் செய்ய வைத்து,  அந்தப் புகழில் குளிர் காய்வது பல தலைவர்களுக்கும் அரசியலில் பாலபாடம் என்பதை நீ அறிவாயா?.

எனக்கும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இதைத் தெரிந்து கொள்ள எத்தனை ஆண்டுகள் பிடித்தன என்று உனக்குத் தெரியுமா ?. எங்களுடைய பொன்னான நேரம், உழைப்பு, உணர்வு, இளமை, பணம், செல்வம், நல்வாய்ப்புகள் - இப்படி எதை எதையெல்லாம் இந்தத் தலைவனின் வார்த்தை சாலத்தில் விழுந்து மயங்கி இழந்தோம் என்பதை நாங்கள் இன்னும் வெளியே சொல்லவில்லை.

நீ கொடியை எரித்தாய், காவல்துறையால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப் பட்டாய் என்ற செய்தி அறிந்து நாங்களெல்லாம் பதறித்தான் போனோம். கொடியை எரித்தால் அதற்கு சட்டம் என்ன தண்டனை சொல்கிறதோ அதைக் கொடுத்துவிட்டுப் போவதுதான் காவல்துறையின் வேலை.  ஆனால், அதை மீறி நீ துன்புறுத்தப்பட்டிருந்தால் அது ஏற்புடையதன்று.  அதற்காக இதோ நான் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

“அவன் இளைஞன், உணர்ச்சிவயப்பட்டு சாகசச் செயலாக எண்ணிச் செய்து விட்டான், அவனுக்கு அறிவுரை கூறி, சட்டம் அளிக்கும் தண்டனை மட்டும் விதித்திருக்கக் கூடாதா ?” என்று இதோ நான் காவல்துறையைக் கேட்கிறேன். அது கண்டிக்கத்தக்க வன்முறைச் செயல் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அதே சமயம், தொண்டனை மூளைச்சலவை செய்து அவனை ஆபத்தில் சிக்க வைத்து விட்டு, தனக்கு மட்டும் ரகசியமான தனிவழி வைத்துக் கொள்ளும் தலைவனின் நயவஞ்சகம் இன்னும் வன்முறையானதல்லவா ?. 

காவல்துறையைக் கண்டிக்க வேண்டுமென்றால் தலைவனின் கள்ளத்தனத்தையும் கண்டிக்க வேண்டுமல்லவா ? அந்த வன்முறையிலிருந்து இந்த வன்முறை எப்படி வேறுபட்டது என்று விளக்க முடியுமா ? சொல்லப்போனால் அதைவிடப் பெரிய வன்கொடுமை இதுதான் என்று நான் சொல்வேன். 

உன்னைத் துன்புறுத்தினார்கள் என்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராடியுள்ளனர் பல தோழமை இயக்கங்கள்.  அந்த இயக்கங்கள் எல்லாம் இந்தியத் தேசியத்திற்கு எதிரானவை என்று நான் அறிவேன்.  உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோருகிறார்கள்.

 நல்லது, அப்படியெனில், ‘தமிழ்த்தேசியம்’ பேசிக் கொண்டு ‘இந்திய தேசியக் கொடியை’ப் பெருமையாக நெஞ்சில் தாங்கிய தியாகுவையும் அவரது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்க’த்தையும் அவர்கள் கண்டிப்பார்களா ?.  “இரட்டை வேடம் போட்டுத் தொண்டர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் தியாகுவே, தமிழ் அரசியலை விட்டு வெளியேறு” என்று முழக்கம் போடுவார்களா ?  ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள ‘தமிழ்த்தேசிய விடுதலை இயக்க’த்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவரால் ஏமாற்றப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கைக்கு நியாயம் கோருவார்களா ? குறைந்தது, தமிழர் உரிமை சார்ந்த கூட்டமைப்புகளில் இனிமேல் இந்த இரட்டை வேடதாரிக்கு இடமில்லை என்றாவது அறிவிப்பார்களா ?.

இவை எல்லாம் நடப்பதாக இருந்தால்,  2012 ல் இந்த செய்தி வெளியானவுடனேயே செய்திருப்பார்கள். செய்யவில்லையே, ஏன் ?.

ஏனென்றால், நம்மிடம் ஓர் அளவுகோல் இருக்கிறது. அதில் அளந்தால், நமக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி, அடுத்தவன் தவறு செய்தால் தட்டிக் கேட்போம், நாமே செய்தால் மூடி மறைப்போம்.... என்பதுதான் வரும்! 
 
அதற்கும் மேல், தியாகுவைத் தட்டிக் கேட்க யாருக்கும் துணிவில்லை, அவரது நாவன்மைக்கும் நயவஞ்சகத்துக்கும் ஈடு கொடுக்க யாருக்கும் திராணியில்லை என்பதுதான் கசப்பான உண்மை !.  எனவேதான் கண்டுகொள்ளாமல் கடந்துபோகத் தலைப்பட்டார்கள். இத்தகையவர்களை வைத்துக் கொண்டா தமிழ் ஈழத்தையும், தமிழ்நாட்டையும் அடையப் போகிறோம்....??????. ஹைய்யோ ஹைய்யோ.....

நீ இளைஞன், நாளை வெளியே வந்தால் உனக்கு உழைத்துப் பிழைப்பதற்குக் கை வேண்டுமல்லவா தம்பி ?  உன் பெற்றோர்கள் உனக்கு நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்களா ? உட்கார்ந்து சாப்பிட உனக்கு உத்தரவாதம் இருக்கிறதா ?

இதுபோன்ற ‘பிழைப்புவாத’, ‘வாய்ச்சவடால்’ தலைவர்களுக்குச் சோறு போட நூறு பேர் காத்திருப்பார்கள். உழைக்காமல் உல்லாச வாழ்வு வாழ்வது எப்படி என்பது அவர்களுக்கெல்லாம் அரசியலில் இன்னொரு பாலபாடம் !.

எதற்காக எதைச் செய்வது என்ற விவேகம் கூட இல்லையா ? கொடியை எரித்தால் இந்தியா அஞ்சி நடுநடுங்கி விடுமா ? 

கொடியை எரிப்பானேன், பிறகு ஏற்றி வைத்து சல்யூட் அடிப்பானேன் ?. கேவலம் ஒன்றரையணா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றுவதற்காக இந்திய தேசியத்தை இதயத்தில் தாங்கிக் கொள்ளும் தலைவர்களுக்கு இடையில், இந்திய எதிர்ப்பைக் காட்ட ஒரு தொண்டனுடைய கை என்பது மிக மிக அதிக விலையல்லவா ?
 
எதற்கு எவ்வளவு விலை கொடுப்பது என்பது கூடத் தெரியாத சிறுமதியாளர்களான நாமா தமிழ்நாட்டை விடுதலை அடையச் செய்யப் போகிறோம் ?  தமிழ் ஈழத்தை வாங்கிக் கொடுக்கப் போகிறோம் ?

ஈழப்போர் தொடக்கம் இன்று வரையிலான எட்டு ஆண்டுகளில் தமிழ்த்தேசியம்/திராவிடத்தேசியம் எந்த அளவில் மக்களைப் போய்ச் சேர்ந்திருக்கிறது ? வெகுமக்களை ஈர்க்காத எந்த இயக்கமும் வெற்றியடையாது என்பது நமக்குத் தெரியாதா ?

கார்கில் போர், சியாச்சின் பனிச்சரிவு என்றால் நம் வெகுமக்கள் - தமிழ்மக்கள் துடிதுடிக்கிறார்கள். ஒரு திலீபன் மகேந்திரன் கை ஒடிந்தது என்றால் ஒரு செய்தியாகக் கூடக் கேட்காமல் கடந்து போய்விடுகிறார்கள்.

எனில், இத்தனை ஆண்டுகளாக, திராவிடத்தேசியம்/தமிழ்த்தேசியம் நடத்தியும் மக்களைச் சென்றடையவில்லை என்றால் எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது என்றுதானே பொருள் ? அந்தத் தவறு என்ன, அதைத் திருந்திக் கொள்வது எப்படி என்றுதானே யோசிக்க வேண்டும் ?
 
அதைவிட்டுவிட்டு அடுத்த போராட்டம் என்ன, அடுத்த போஸ்டர் எங்கு ஒட்டுவது, அடுத்த கொடியை எங்கு எரிப்பது என்ற இந்தப் பாணியிலேயே யோசித்தால் இதற்கு முடிவுதான் என்ன ?  இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்தும் போஸ்டர் ஒட்டிக் கொண்டும், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுக் கொண்டும் இருப்பதுதான் நடைபெறும்.
 
இயக்குநர் வெற்றிமாறனின் சமீபத்திய ‘விசாரணை’யில்,  ‘சிஸ்டம் சிஸ்டம்’ என்று ஒரு வார்த்தை அதிகம் புழங்குகிறது.  அதிகார வர்க்கத்திற்கு ஒரு ‘சிஸ்டம்’ இருப்பது போலவே, அவர்களைத் தட்டிக் கேட்பதாகச் சொல்லப்படும் கொள்கை அரசியல் வர்க்கத்திற்கும் ஒரு ‘சிஸ்டம்’ இருக்கிறது.  இரண்டுக்கும் அடிப்படைப் புள்ளி ‘நேர்மை’தான்.  இருதரப்பிலுமே அது இல்லாத போது, பொதுமக்கள் பார்வையில் இரண்டும் ஒன்றாகக் காட்சி அளிப்பதில் தவறில்லையே !
 
தவறு எங்கே நிகழ்கிறது என்று நான் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் அதற்கு நான் கொடுத்த விலைதான் மிக அதிகம் - ஈடு செய்ய முடியாத என் இளமைக்கால இருபது ஆண்டு காலம் !
 
நான் மேலே சொன்ன நிகழ்வு, மூழ்கிய பனிப்பாறையின் மேல் நுனி மட்டும்தான் ( Tip of the Ice berg ) !.  சொல்வதற்கு இன்னும் நிறைய பாடம் என்னிடம் உள்ளது.  நேரம் வரும்போது எல்லாவற்றையும் அப்பட்டமாக எடுத்துரைப்பேன்.
 
இப்போது என் மௌனம் கலைத்து சிறிதே பேசக் காரணம் கூட, வழி தவறும் தருவாயில் இருக்கும் சில அப்பாவி இளைஞர்களையேனும் மீட்டெடுக்கலாமே என்கிற ஆதங்கம்தானே தவிர வேறில்லை.

இந்தக் கட்டுரையை நான் எழுதியதற்கும் கூட என்மேலேதான் பாய்வார்கள் - நான் காட்டிக் கொடுத்து விட்டேன் என்று !  

ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நானும் தமிழ்த்தேசியவாதிதான் !  பெரியார் போட்ட சமூக மாற்றப் பிச்சையில் கல்வி கற்று முன்னுக்கு வந்தவள் என்பதால் திராவிடத் தேசியவாதியும் கூட !
தமிழ்மொழியும் இனமும் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே என்  தீராத ஆசை ! ஓயாத அலையாக என் நெஞ்சில் அடித்துக் கொண்டிருப்பதுவும் அதுவே ! அதில் எந்த சமரசமுமில்லை ! 
 
அதற்காக நான் தேர்ந்தெடுத்த பாதை - நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், வள்ளுவம் ! 

 It's a road less taken, but i DARED !

முடிந்தால் நீங்களும் முயன்று பாருங்களேன் அன்புத் தம்பிகளே !!!.

அன்புடன்
கவிஞர் தாமரை.

ad

ad