புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2017

ஈழ எழுச்சிப் பாடல்களினூடாக போராட்டத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.ஜி.சாந்தன்

எழுச்சிப் பாடல்கள் வரிசையில், போராளிப் பாடகராக இருந்து மறைந்த ‘சிட்டு’ கே.ஜே.ஜேசுதாஸாகவும், ‘சாந்தன்’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றும் கோலோச்சியவர்கள். இன்றைக்கு இருவரும் எம்மிடத்தில் இல்லை.ஈழ எழுச்சிப் பாடல்களினூடாக போராட்டத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.ஜி.சாந்தன். காலங்கள் மாறி காட்சிகள் மாறினாலும் அவரின் குரல் ஏற்படுத்திய அதிர்வினை இன்றைக்கும் உள்வாங்கி உணர வைக்கின்றன அவர் குரல்.
ஆனால், அவர்கள் பாடிவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான பாடல்கள்… எம்மை சோர்ந்து போன தருணங்களில் எழுச்சி பெறவும், போராட்டத்தின் தியாகங்களை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச் செல்லவும் உதவுகின்றன.
எழுச்சிப் பாடல்களில் மாத்திரமின்றி, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் பற்றி சாந்தன் பாடிய “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” பாடல் அவ்வளவு பரவசமாக இருக்கும். அதற்குள்ளும் ஒரு அதிர்வு இருக்கும். அது அவர் குரலின் தாக்கம்.
பெரும் புயலென வீசிய உன் எழுச்சியின்..
குரல் எதிரிகளால் நசுக்கப்பட்டது அன்று
இன்று உன் உயிர் மூச்சும் பறிக்கப்பட்டது
வியாதியெனும் கொடிய அரக்கனால்
சாந்தன் ஒரு சிறந்த பாடகர். நாடகக் கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர்.
இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இன்று 26-02-2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.
இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம்.
அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது.
இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த மருதமலைப் பாடலை பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.
அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.
அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.
இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர்.
இரண்டாவது மகன் இசையரசன்
தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன்னர் அறவழிப் போராட்ட காலத்தில் இசையில் குறிப்பாக பாடல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வீரவேட்கை அதிகரித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த காலத்தில் கலைத்துறையும் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை.
குறிப்பாக ஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்ட பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகருமான.,
எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டுவந்த பெருமையும் சாந்தன் பாடிய பாடல்களால் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
ஈழம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் சாந்தனின் காந்தக் குரலுக்கென தனியான ரசிகர்களே உள்ளனர்.
இந்நிலையில் இப் பாடகர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
ஈழத்து புரட்சிப்பாடகர் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார் வைர நெஞ்சங்களை படைக்க வல்ல குரலோன் இன்று நிச்சயமாக சொர்க்கத்தின் வாசலில் நின்றிருப்பார்.
கனத்த இதயத்தையும் கரைய வைத்த சாந்தன் இறந்தும் வாழ்வார் தன் குரலால் அவர் தன் சிறப்பு மிக்க பெருமை வாழ்க.

ad

ad