கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது.
சட்டசபை கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:-
நான் 14 மாதங்கள் இந்த அரசை ஓட்டினேன். உங்களுக்கு (பி.எஸ். எடியூரப்பா) பதில் அளிக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை. எனது மனசாட்சிக்கு தான் நான் பதிலளிக்க வேண்டும். கடந்த 14 மாதங்களிலிருந்து அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
நான் என்ன வேலை செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும் என கூறினார்.
சித்தராமையா பேசும் போது கூறியதாவது:-
நீங்கள் (பி.எஸ். எடியூரப்பா) முதல்வராக இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் கிளர்ச்சியாளர்களுடன் இருக்கிறீர்கள், நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா? அது முடியாத காரியம்! இந்த நம்பிக்கை தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் இந்த அரசாங்கம் அரசியலமைப்பற்றது மற்றும் ஒழுக்கக்கேடானது என கூறினார்.
கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-
நான் விவசாயிகளின் நண்பன், விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன் என கூறினார்.
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா.
105 பாரதீய ஜனதா எம்எல்ஏக்கள் மற்றும் 1 சுயேச்சை எம்எல்ஏ ஆகியோர் எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்