புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012

ஆனந்த விகடனின் பேட்டியைக் கண்டித்து, ஈழப் பத்திரிக்கையாளர்கள் ஆற்றியுள்ள எதிர்வினை இது.... 
புங்குடுதீவு சுவிஸ் டாட் கொம் -இணையம் -சுவிட்சர்லாந்த் 

விகடனில் வந்த இந்த கட்டுரையை முழுதுமாக வெளியிட எமக்கு விருப்பமில்லை மன்னிக்கவும 


கடந்த வாரம் முகநூல் முழுக்க வினோத் என்ற பத்திரிக்கையாளர், ஈழப்ப்போர் நடந்த சமயத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த  நிருபமா ராவை எடுத்த பேட்டி தொடர்பாக
வாழ்த்துச்செய்திகளும், பாராட்டுச் செய்திகளும் குவிந்திருந்தன.  அந்தப்பேட்டியில், நிருபமா ராவிடம், மிகச் சிறப்பாகவே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.  அந்தப் பேட்டி ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.  

ஆனால், இந்த வாரம், ஒரு பெண் போராளியின் பேட்டி என்று விகடனில் வந்திருக்கும் பேட்டி, தமிழர்களையும், இன உணர்வாளர்களையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.  இந்தப் பேட்டி, இந்திய வெளியுறவு உளவு நிறுவனமான "ரா" வின் வேலையென்றே நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர் ஈழத் தமிழர்கள்.  நிருபமா ராவின் பேட்டி ஏற்படுத்திய பாதிப்பை சமன் செய்ய ரா வின் நெருக்குதலால் இந்தப் பேட்டி வெளியாகியுள்ளதோ என்ற அவர்கள் சந்தேகம் நியாயமானதே... 

ஆனந்த விகடனின் பேட்டியைக் கண்டித்து, ஈழப் பத்திரிக்கையாளர்கள் ஆற்றியுள்ள எதிர்வினை இது.... 

அந்த அறையினுள் வெறும் நிசப்தமே எஞ்சியிருந்தது. அவள் அழுதுமுடியட்டுமெனக் காத்திருந்தோம். தற்கொலை முயற்சியொன்றிலிருந்து காப்பாற்றப்பட்ட அவள் மீண்டும் அவ்வாறான முயற்சியொன்றினில் ஈடுபடலாமென்ற அச்சம் வைத்திய நிபுணரிடமிருந்தது. முன்னாள் போராளியான அவளது எதிர்காலம் பற்றிப்பேச ஊடகவியலாளனான என்னையும் அவர்  அழைத்திருந்தார். முன்னாள் போராளியான அவள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டாள். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கென அழைக்கப்பட்ட அவள் சாதாரண கடைநிலை சிப்பாய் முதல் அதிகாரிகள் ஈறாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாள். அத்தகைய சித்திரவதை கூடமொன்றினில் தற்கொலை செய்யும் நோக்கினில், பிளேடுகளை அவள் நொருக்கி விழுங்கியிருந்தாள். தம்மீதான பழிகளிலிருந்து தப்பிக்க வைத்திய சாலையினில் அவள் அதே படையினராலேயே அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

மூடப்பட்ட அறையினுள் அவள் கூறிய அவலங்கள் எந்தவொரு பெண்ணும் உலகினில்; எங்குமே சந்தித்திராதவை. யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் நூற்றுக்கணக்கான பெண்களுள் அவளுமொருத்தி. மீண்டுமொருமுறை தற்கொலைக்கு முற்படலாமென்ற அச்சத்தினில் அவளை ஆறுதல் படுத்த முற்பட்டோம். இத்தகைய துன்பங்களை பொருட்படுத்த வேண்டாம். வீதியால் பயணிக்கும் போது காலில் பட்டுவிடும் மாட்டுச் சாணமாக இதனைக் கருதி கால்களைக் கழுவிவிட்டு பயணிப்போமென்றேன் நான்;. அவள் சிரித்தவாறு சொன்னாள், “இல்லை அண்ணா, இப்போதைக்கு நான் சாகமாட்டேன். அங்கிருந்து தப்பிக்கவே பிளேடை உடைத்து விழுங்கினேன். அதை விட வேறு வழியிருக்கவில்லை. எனக்கு செய்வதற்கு நிரம்பவுமே கடமைகள் இப்போதைக்கு எஞ்சியிருக்கின்றதென கூறுகையினில் அவளது முகம் விகாரமடைந்திருந்தது.

அந்தப் பெண்மணிக்கு முப்பத்தைந்து முதல் நாற்பது வயதினுள் இருக்கும். வெறிச்சோடிய கண்கள் பல கதைகளைச் சொல்லின. போராளியான கணவன் உயிருடன் இருக்கின்றானா ? இல்லையாவென்பது கூட தெரியாது. தற்போது அவள் ஆறு மாத கர்ப்பிணி. வருடம் முழுவதும் ஊரிலுள்ள பாடசாலை மூடப்பட்டிருக்காதா என கடவுளிடம் கேட்பேன். பாடசாலை திறக்கும் நேரம் எனது பிள்ளைகள் வீட்டை விட்டு அங்கு போய்விடுவார்கள். அதுதான் சாக்கென வீட்டின் முன்னாலுள்ள காவலரணிலுள்ள சிங்கள சிப்பாய்கள் உள்ளே வந்து விடுகின்றார்கள். பிறக்கப் போகும் குழந்தைக்கு எவன் அப்பனென எனக்குத் தெரியாது. அந்த இராணுவ உடையில் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருப்பதாகக் கூறும் அத்தாயும் தற்கொலை முயற்சியிலிருந்து மீட்கப்பட்டவரே. தனது பிள்ளைகளை என்ன முகத்துடன் சந்திக்கப்போகின்றேனென அழும் அத்தாய் தற்போது காப்பகமொன்றிற்கு அனுப்பப்பட்டுவிட்டார். இப்போது தாயுமற்றுப்போயுள்ள அந்த பிள்ளைகள் விடுதியொன்றினில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போரின் பின்னரான, தமிழ்பெண்களது அவலங்கள் பற்றிப் பேசவும், எழுதவும் எங்களிடம் ஆயிரக் கணக்கான கதைகள் இருக்கின்றன. இவர்களுக்கு முறைதவறிப் பிறக்கப்போகும் குழந்தைகளை முன்னிறுத்தி அவர்களை விபச்சாரிகளாக்க உங்களால் முடியும். ஏனெனில் எங்களை முடக்கி விட உங்களில் பலர் பணம் வாங்கிக் கொண்டு வரிசை கட்டி நிற்கின்றீர்கள். எழ எழ முதுகினில் குத்திக்கொண்டேயிருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குப் பின்னாலுள்ள இயக்குபவர்கள் பற்றியும் நாம் புரிந்தேயுள்ளோம். எனினும் நாம் இப்போதும் மௌனமாகவே இருப்போம். ஏனெனில் நாம் இப்போது பலவீனமானவர்களாகியிருக்கின்றோம்.

வன்னியில் இறுதிக்கணம் வரை எழுதிக் கொண்டிருந்த, குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளன் அவன். இப்போது உயிருடன் இருக்கின்றானா? இல்லையாவென்பது கூட எவருக்கும் தெரியாது. அவனது குடும்பத்திற்கும் அதே கதைதான். மாதாந்தம் கிடைக்கும் பத்தாயிரம் ரூபா (இந்திய ரூபா வெறும் 3,500) வருமானத்தில் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மூன்று பிள்ளைகள், கணவனது வயோதிபத் தாய், யுத்தத்தின் போது விமானக் குண்டு வீச்சினில் உயிரிழந்த கணவரது தம்பியின் குடும்பம் அனைத்தையும் அவளே பார்த்துக் கொள்கிறாள். அவள் எவரிடமும் கையேந்தத் தயாராக இல்லை. புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவரது உதவியின் கீழ், பிள்ளைகளது படிப்பிற்கென உதவி வழங்க தேடிச் சென்ற போது கூட தீர்க்கமாக ஆராய்ந்தே உதவியை ஏற்றுக்கொண்டாள். அண்ணா யாரிடமும் கை நீட்டுவது அவருக்கு பிடிக்காதென்றாள் எட்டிப்பார்க்கும் கண்ணீர்த்துளிகளினூடே. அவளது அந்த வீம்பிற்கு நான் தலை வணங்கினேன்.

வன்னியில் செல்வச் செழிப்போடும், வசதிகளோடும் வாழ்ந்த அவர்களது தேவைகளை முழுமையாக தீர்த்து வைப்பதென்பது கடினமானதொன்றே. தசாப்பதங்களாக உழைத்து சேமித்து வைத்தவற்றை பிடிங்கியெறிந்து விட்டு, நடுத் தெருவில் விடப்பட்ட அவர்களை மீட்பது கடினமானதே. ஆனாலும் புலம்பெயர் தேசத்திலும், தாயகத்திலும், சிலவேளை தமிழகத்திலிருந்தும் கூட சாதாரணமானவர்களிடமிருந்தும், உணர்வாளர்களிடமிருந்தும் உதவி கிடைக்கின்றன. கிடைக்கின்ற உதவிகள் மேடை போட்டு சொல்லப்பட வேண்டியதில்லை. மேடை போட்டு சொல்லுபவர்கள் எங்குமே உதவ முன்வரவில்லை. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போதும் விழ விழ மீண்டெழுந்ததே எம்வரலாறு. அதுவே ஈழத்தமிழர்களுக்கான குணவியல்பும் கூட. முகத்திற்கு நேரே பிரச்சினைகள்  வரும்போதும் பதகளிக்கும் அவர்கள், சிறிது காலத்தினுள்ளாகவே அதனை எதிர்கொள்ளத் தயாராகி விடுவது அவர்களது சிறப்பியல்பு. முள்ளிவாய்க்காலின் பின்னரும் வன்னியின் எழுச்சி ஒன்றும் இலங்கை அரசோ, சர்வதேசமோ கொண்டுவந்ததல்ல. சாதாரண புலம்பெயர் தமிழ் குடும்பங்களது உதவியும், தமது காலில் நிற்க முனைப்பு காட்டி நிற்கும் மக்களதும் கூட்டிணைவே அது.

முன்னாள் பெண் போராளிகள் மற்றும் தளபதிகளது மனைவியரது பாலியல் தொழில் என்னும் கட்டுக்கதை திட்டமிட்டு, இந்திய உளவு அமைப்பான “றோ” வினால் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட ஒன்றே. அவர்களது நிழலாக செயற்படும் இந்திய செய்தி முகவர் மையமூடாக இக்கதைகள் முதலினில் அவிழ்த்து விடப்பட்டன. அதை இலங்கை அரசும் அதனது எடுபிடிகளும் பரவலாக உலகமெங்கும் எடுத்துச் சென்றனர். திட்டமிட்ட வகையினில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புலம்பெயர் தேசத்து உறவுகளையும், ஆதரவு செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து அவர்களது உளவரணை சிதைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியே அது.

இத்தகைய பாரம்பரியத்தினில் இப்போது ஆனந்த விகடனும் தனது பங்கிற்கு கதையொன்றை அரங்கேற்றியுள்ளது. தமிழ் இணையங்கள் சிலவற்றில் யாழ் புகையிரத கட்டடப் பகுதியினில் விபச்சாரம் நடப்பதாக வெளிவந்த கதைகளை நம்பியும் ஈழ ஆதரவாளர்கள் மற்றும் கூட்டமைப்பினரையும் இலக்கு வைத்து திட்டமிட்ட வகையினில் தானே கேள்வி பதிலெனும் கட்டுக் கதையை அரங்கேற்றியிருக்கின்றார் அருளினியன் எனும் நபர். ஒரு மூத்த பெண் போராளி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனை பேர் சொல்லி அழைக்கமாட்டாரென்பது அனைவருக்கும் தெரியும். பலவேளைகளில் அண்ணையாகவோ, அப்பாவாகவோ தான் அவர் இருந்து வந்துள்ளார்.

எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்து, உடைந்தழுகின்ற போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்கவே அவர்கள் பாடுபடுகின்றார்கள். அவர்களை உங்கள் எழுத்துக்களால் விபச்சாரிகளாக்காதீர்களென கெஞ்சிக் கேட்கின்றோம். தடுப்பு முகாம்களிலும், முள்ளிவாய்க்காலிலும் நடந்து முடிந்தவற்றை மறந்து புது வாழ்வொன்றை வாழ அவர்கள் முற்பட்டுள்ளார்கள். அதேவேளை காணாமல் போன தமது கணவரை. பிள்ளைகளை தேடியலையும் அவலமும் அவர்கள் வசமிருக்கின்றது..

கட்டுரையாளனான எனது தனிப்பட்ட கருத்து இதுவென உங்களினில் சிலர் சாயம் பூச முன்னுக்கு வருவீர்களென தெரிந்தேயுள்ளேன். அதானாலேயே யாழ்ப்பாணத்தின் முன்னணி கள செய்தியாளர்கள் சிலரது கட்டுரை தொடர்பான விமர்சனங்களையும் இணைத்தேயிருக்கின்றேன்.

ந.பரமேஸ்வரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

ஈழத்தவர்களது இரத்தத்தையும், கண்ணீரையும் வர்த்தகம் செய்வது இவர்களுக்கு வழக்கமாகப்போய்விட்டது. அவர்கள் பிழைப்பு அவர்களுக்கு. இவர்கள் திருந்துவார்களென நான் நம்பவில்லை.
புங்குடுதீவு சுவிஸ் டாட் கொம் -இணையம் -சுவிட்சர்லாந்த் 

விகடனில் வந்த இந்த கட்டுரையை முழுதுமாக வெளியிட எமக்கு விருப்பமில்லை மன்னிக்கவும 

இ.தயாபரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

தலைவர் - நிமலராஐன் ஞாபகார்த்த அமைப்பு

நாங்கள் தொப்புள் கொடி உறவென அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்தப் பெண் போராளிகளையும் கேவலப்படுத்தும் வகையினில் எழுதிக் கிழிக்கிறார்கள். விகடன் இதுவரை அர்ப்பணிப்புடன் செய்த சிலது கூட இக்கட்டுரையால் நாறடிக்கப்பட்டுவிட்டது. பாவம் அவர்களை சமூகம் உங்கள் கட்டுரைகளைப்; பார்த்து தவறாக எடை போட்டுவிட போகிறது. எமது அமைப்பு கூட சத்தமின்றி சத்திர சிகிச்சை தொழில் முயற்சியென பல உதவிகளை வழங்கிக்கொண்டேயிருக்கின்றது.

ஆ.சபேஸ்வரன் - ஊடகத்துறை விரிவுரையாளர்

உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்


எங்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டே நாறடிக்கும் முயற்சி. தமிழக செயற்பாட்டாளர்களையெல்லாம் வம்புக்கு இழுத்து, சோர்ந்து போகச் செய்யும் நன்கு திட்டமிடப்பட்ட சதி முயற்சி. பின்னால்; இருப்பவர்கள் யார் என்று புரிகின்றது.

ந.பொன்ராசா - ஊடகவியலாளர் செயலாளர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம்

நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத் தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.

எம்.நியூட்டன் - ஊடகவியலாளர், வீரகேசரி

தடுப்பு முகாம்களிலும், பின்னரும் பெண் போராளிகள் மீதான துன்புறுத்தல்கள் எமக்கும் தெரியும். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீம்புடன் வாழ முற்பட்டுள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம். அவர்களைச் சமூகம் நிராகரித்துவிட்டதாக கூறுவது பச்சைப் பொய். அவர்களுக்கு உதவினால் பழிவாங்கப்படுவார்களென்ற அச்சம் உண்டு. அவ்வாறு உதவினால் காணாமல் போக கூட வேண்டியிருக்கும். அதையும் மீறி அவர்களைத் தூக்கிவிட கை கொடுத்தவாறு தான் இருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் பெரும்பாலும் தமிழக ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களே. இப்போது அவர்களுக்கு விபச்சாரம் விற்பனைப் பொருளாகிறது. எந்தவொரு முன்னாள் போராளியும் விபச்சாரியாக இந்த தேசமும், உறவுகளும் விடப்போவதில்லை. அவ்வாறு அவர்கள் விபச்சாரியானாலும் நீங்கள் செய்யும் ஊடக விபச்சாரத்தினை விட அது ஒன்றும் மோசமானதல்ல.

விகடனில் வெளிவந்த பேட்டி குறித்து, ஆதி என்ற ஈழத்தமிழரின் எதிர்வினை இது...

"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் அருளினியனால் எழுதப்பட்டு விகடனில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் முழுக்க முழுக்க போர்க்குற்ற ஆதார வாக்கு மூலம் இருந்தும் அதை மனித உரிமை அமைப்புகளுக்கோ சம்மந்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கோ அனுப்பாமல் வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விகடன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறது.

சனல் 4 உட்பட எத்தனையோ ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் தமிழ் மக்களின் நியாயத்திற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க விகடனோ ஒரு போராளியை விபச்சாரியாக்கி பணம் சம்பாதிக்கிறது.

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்

உண்மையாகவே இந்த வாக்கு மூலம் எடுக்கப்பட்டிருந்தால் அதை மனித உரிமை அமைப்புகளுக்கு போர்க்குற்ற ஆதாரா வாக்கு மூங்களாக அனுப்புங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் அனுப்புகிறேன் என்று விகடன் "திருமாவேலனிற்கு" இன்று நண்பகல் முதல் இது வரை ஏராளமான அழைப்புகளை எடுத்துவிட்டேன்.

முதல் தடவை எனது அழைப்பை ஏற்ற அவர் "நான் ஆதி பேசுகிறேன்.... அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை சம்மந்தமாக.." என்று உரையாடலை தொடரும் பொழுது "ஹலோ..ஹலோ... " என்ற படி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு எல்லா அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருக்கிறார்.

தவிர அருளினியனுக்கு அழைப்பை எடுத்து கேட்டேன்.. அவர் தான் விகடனின் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு வேலையாள் மட்டுமே என்று சொல்லியிருந்தார்.

"உங்களிடம் போர்க்குற்ற ஆதாரம் இருந்தும் அதை வெறும் சம்பளத்திற்காகவா மறைக்கிறீர்கள்" என்று கேட்டேன்... தன்னிடம் எதுவும் இல்லை நீங்கள் விகடன் அலுவலகத்திலேயே கேளுங்கள் என்று சொன்னார்.

ஆக பேட்டி உண்மை என்றால் சிறிலங்கா அரை காப்பாற்றுவதற்காகவா விகடன் போர்க்குற்ற ஆதாராங்களை சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்காமல் மறைக்கிறது??? சிறிலங்கா அமச்சர் ஒருவரும் பெண்கள் மீதான வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார் என்று பாதிக்கபட்ட பெண் கொடுத்திருக்கும் வாக்கு மூலத்தை விகடன் என்ன நோக்கத்திற்காக மறைக்கிறது??

அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இதை எழுதியிருக்கிறார்கள்.

தவிர..

சுதந்திர மற்றும் ஆனந்தபுரச் சமர்களில் தனது பிள்ளைகளை தன் தாய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு களமாடியதாக சொல்லியிருக்கும் பெண் 3 வருடங்கள் கழித்து வந்து பிள்ளைக்கு பாலூட்டுவதற்காக பாலற்ற முலையை கொடுத்தாள் என்று அருளினியன் எழுதியிருப்பது அருளினியனின் கற்பனை வளத்தையும் விகடனின் காம வெறியையும் காட்டுகிறது.

அது போக யோ.கர்ணனை முள்ளிவாய்க்கால் வரை போராடிய முன்னாள் போராளி என்று எழுதியவர்தான் அருளினியன். ஆனால் யோ. கர்ணன் ஏற்கனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி பிரில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பொம்பிளைப் பிள்ளைகளோடு அநாகரிகமாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்ட்டவர் என்பது ஊரறிந்த விடையம். இது புதுசாக முழைத்திருக்கும் அருளினியனுக்கோ விகடனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதுபோக தமிழ்நாட்டு ஊடகங்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறும் வியாபார நோக்கமே. தனது சொந்த சம்பள உயர்விற்காக, வலிகளை தாங்கி ஊமைகளாக போயிருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தவும்.. தமிழீழ பெண்களை இழிவுபடுத்தவும் அருளினியன் ஆரம்பித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.

வாழ்நாளில் போர்களையோ அல்லது களம் நின்ற போராளிகளையோ சந்தித்திராத அருளினியனுக்கு எல்லாமே சினிமாவாகதான் தெரியும்.

போராளிகள் வறுமையில் இருக்கிறார்கள் ஆனால் யாரும் பிச்சையெடுக்கவில்லை. வாழ்வை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது!!!!

பேட்டி உண்மையென்றால்!!

தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட மிகக் கொடுமையான இன அழிப்பு போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை சேகரித்து ஆனால் தனது வேலை மற்றும் சம்பளத்தை தக்க வைத்து கொள்ளவதற்காக, அதை பகிரங்கப்படுத்தி நியாம் கேட்க வக்கில்லாத அருளினியனும் ஆதாரங்களை ஒளித்து வைத்து சிங்கள அரசிற்கும் இந்திய அரசிற்கும் சலியூட் அடிக்கும் விகடனும் தமிழீழ போர் பற்றியோ தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ கதைக்க அருகதையற்றவர்கள்.

வெறும்  பணத்திற்காக சொந்த இன அழிப்பு ஆதாரத்தையே மறைக்கும் இவர்கள் இனிமேல் நடைப் பிணங்கள் தான்...

உண்மையிலேயே இனப் பற்று இருந்தால்... ஒடுக்கப்படும் இனத்திற்கான ஊடக நேர்மை இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி நியாயம் கேட்கட்டும்.. இல்லையேல் எம்மிடம் தரட்டும் அதை நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து நியாயம் கேட்போம்.

ஆதி

ad

ad