புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

முட்டையிடும் பெட்டைக்கோழி

ஒரு முறை பாண்டிச்சேரி கவியரங்கத்தில் கம்பன் சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் கவிபாட, அரங்கம் முடிந்தவுடன் ஒரு முதுபெரும் தமிழ்ப்புதல்வர் வாலியிடம் “இவ்ளோ நல்லா கவிபாடும் நீங்க, சினிமா பாடல்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கோடு செயல்படறீங்க”ன்னு கேட்டார். அதற்கு வாலி சொன்ன பதில்:
இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
மேலும்…
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!
என்று தன் மனதில் பட்டதை கவிதை நயத்தோடு படிக்கும் எல்லோருக்கும் எளிதாக புரியும் வகையில் உண்மையை பல கவியரங்குகளில் புலவர்களுக்கு சொல்லியதாக அவரின் “நானும் இந்த நூற்றாண்டும்” நூலில் குறிப்பிடுகிறார்

உலகம் சுற்றா “வாலி”பன்

DElhi
பத்தாயிரம் திரைப்பட பாடல்களும், ராமாயண பாரத காவியங்களை புதுக்கவிதையிலும் இன்ன பிற கவிதை நூல்களும் எழுதியிருக்கும் கவிஞர் வாலி அவர்கள், எனக்கு கிடைத்த உலகம் போதும், வெளிநாடுகளென்ன, இங்கிருக்கிற டில்லியே நான் பார்த்ததில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னார்.
தகவல் : ஸ்ரீகாந்த்.
தொடர்புடைய சுட்டி “
தமிழ் சினிமாவும் பாடல்களும்

கண்ணதாசனே !

Kannadasan 2
கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி 
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
 
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும் 
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும் 
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
 
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
- கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை}

ஒபாமா உனக்கு ஒப்பாகுமா?

Kalingar
தமிழ் வணக்கம்,
தமிழினத் தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்?
வைப்பேன் என் தலைவனுக்கு
மட்டும் ஒரு வணக்கம்.
எவரேனும் எண்ணுவரோ
தலைவன் வேறாக
தமிழ் வேறாக ?
தலைவரல்லவா இருக்கிறார்
தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே !
உன் வருகை
கண்டதும் தூக்குவேன்
என் இருகை.
உயரிய தலைவா
உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு
வாயை திறந்தால் தான்
என் வாய்க்கும்
கவிதை வாய்க்கும்.
என் பாட்டுக்கு
நீதான் பிள்ளையார் சுழி !
உன்னை முன் வைக்காமல்
என்ன எழுதினாலும்
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி !
அருமை தலைவா !
ஆண்டு 2007-ல்
எமனிடம் இருந்து நீ
என்னை மீட்டாய் !
அதற்கு முன்
ஆண்டு 2006-ல் – ஓர்
‘உமனிடம்’ இருந்து
தமிழ் மண்ணை மீட்டாய் !
 
தேர்தலுக்கு தேர்தல்
5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று
அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய
அஞ்சுக செல்வா !
தேர்தல் வரலாற்றில் – உன்னை
வெகுவாக விமர்சனம் செய்ய
டில்லியில் ஒரு கோபால்சாமி
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ
இந்த 2 கோபால்சாமிகளையும்
புறம் தள்ளிய
கோபாலபுரத்து சாமி !
எனவேதான்
கும்மாளமிட்டு – உன்னை
கொண்டாடுகிறது
இந்த பூமி !
அய்யா !
50 ஆண்டு காலம் – உன்
சேவடிபட்ட சபை
சென்னை சட்டசபை !
 
நாவில் தமிழ் ஏந்தி – நீ
நற்றமிழ் இட்ட சபை !
முதல் முதல்
தேர்தல் குளத்தில்
குளிக்க நீ தொடங்கிய ஊர்தான்
குளித்தலை !
குளித்தலைக்கு பிறகு
இதுவரை .. ..
குனியா தலை
உன் தலை !
இனியும் குனியாது
வெற்றியை குவிக்கும்
என்பதும் உன் தலை.
சாதாரணமாய் இருந்து
சரித்திரம் படைத்தாய்.
அய்யா !
அந்த வகையில் நீ ஒரு ஒபாமா !
சரித்திரம் படைத்த பின்பும்
சாதாரணமாக இருக்கிறாய்
அந்த வகையில் உனக்கு
ஒபாமா ஒப்பாகுமா?
உன்னை விட்டு
வலது போனால் என்ன ?
இடது போனால் என்ன ?
மேலே விழுந்த நரி
பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது
நடு நிலைமை
நடுநிலைமை தான்
நல்ல தலைமை !
கலைஞர்கோனே !
கருப்பு கண்ணாடி அணிந்த
கவி வெண்பாவே !
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால்
உன் பின்னே
நகர்கிறது நகர் !
நிஜம் சொன்னால்
ரஜினியை விட
நீயொரு வசீகரமான ‘பிகர்’ !
 
நாவினிக்க நாவினிக்க
உன்னை பாடியே
என் உடம்பில்
ஏறிப்போனது சுகர் !
நீ எங்கள் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு !
நம்மொழி செம்மொழி
அதனை அங்கீகரிக்காது
நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய்
உடனே குனிந்தது
அதன் சிரசு !
 
அதுபோல்
தமிழனின் அடையாளங்களை
வட்டியும் முதலும் சேர்த்து
வள்ளலே நீதான் மீட்டாய் !
தரை மீனை திரும்ப
தண்ணீரில் போட்டாய் !
அதனால் தான் அய்யா – உன்னை
அவருக்கு நிகர் அவர் – தமிழனை
துன்பம் தீண்டாது மீட்கும்
தடுப்புச் சுவர் !
மையம் ஏற்கும் வண்ணம்
உன்னிடம் உள்ளது பவர் !
அத்தகு பவர் – உன்போல்
படைத்தவர் எவர் ?
அமைச்சர் பெருந்தகை
ஆற்காட்டாரிடம் உள்ள பவரால்
வீட்டு விளக்கு எரியும்
நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா
உன்னிடம் உள்ள பவரால் தான்
நாட்டு விளக்கு எரியும் – நற்றமிழ்
பாட்டு விளக்கு எரியும்.
குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள்
ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது !
அடுப்பு விளக்கு
அன்பு விளக்கு
அமைதி விளக்கு
அறிவு விளக்கு என
பல்விளக்கை இன்று
உன்னை பணித்து வாழ்த்தி
சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா
உனக்கு தருவேன்
கேள் ஒரு வெண்பா !
- கவிஞர் வாலி
(வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழர் பெருவிழா நிகழ்ச்சியில்)

சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். அதை தீர்மானிப்பவன் இறைவன்தான். ‘உனக்கு பாட்டு எழுத வராது; ஊரில் நிலம் இருந்தா போயி விவசாயம் பண்ணு’ என்று என்னை விரட்டியவர் எம்.எஸ்.விசுவநாதன். பிறகு அவர் இசையில் 3 ஆயிரம் பாடல்களை எழுதினேன்.
‘சந்திரலேகா’ படத்தில் ராஜாவின் செருப்பை எடுத்து வைக்கும் வேலையாள் வேடம் கூட மறுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பிற்காலத்தில் நடிகர் திலகமாக வளர்ந்தார். இப்படி சினிமாவில் ஜெயிக்க காலம் நேரம் கூடி வரவேண்டும்.
சில இயக்குனர்கள் நான் நினைத்தது வரவில்லை என்பார்கள். ஒரு இயக்குனர் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றார். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று சொல்லிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கவிஞர் அப்துல்ரகுமானிடம் இதை கூறினேன். ‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே’ என்றார்.
- விழாவொன்றில் கவிஞர் வாலி

ad

ad