புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

மனித உரிமை மீறல்கள் பற்றி எந்தவொரு அரசியற்கட்சியும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை - குல்தீப் நயர்

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலுக்கான விளக்கவுரைகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவொரு அரசியற்கட்சியும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற இரண்டு பிரதான கட்சிகள் இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்குக் கூட முன்வரவில்லை.

இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளிவரும் MAINSTREAM வார இதழில் புகழ்பெற்ற ஊடகவியலாளரான Kuldip Nayar எழுதியுள்ள கட்டுரையில்தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஜனநாயகவாதிகள் தடுமாறும் போது சர்வதிகாரிகளுக்கு உற்சாகம் பிறக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் இடம்பெற்ற வாக்களிப்பு நிகழ்வின் போது இந்தியா இதனை உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது 40,000 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பொறுப்பளிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான வெளிப்படையான அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான தீர்மானம் ஒன்று அண்மையில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

"அராஜகங்கள் இடம்பெறும் போது அல்லது மனித உரிமைகள் மீறப்படும் போது நாங்கள் நடுநிலையைப் பேணமுடியாது, பேணமாட்டோம்" என இந்தியாவின் முன்னால் பிரதமர் ஜவர்கலால் நேரு கூறியிருந்த வார்த்தைகளை தற்போது என்னால் நினைவுபடுத்த முடிகிறது. சிறிலங்காவின் கொழும்பில் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவால் தலைமை தாங்கப்படும் சர்வதிகார அரசாங்கத்தை மன்மோகன் சிங் அரசாங்கம் சமாதானப்படுத்த முயல்வது தெளிவாகிறது. சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கும் அவர்களுக்கான சொந்த ஆட்சியுரிமையை வழங்குவதற்கும் முன்வராதமை தொடர்பாக இந்திய அரசாங்கம் எவ்வித அக்கறையையும் காண்பிக்கவில்லை.

'நாட்டின் நலனில்' அக்கறை செலுத்துவதாக நினைத்துக் கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சானது சிறிலங்கா தொடர்பில் எவ்வித எதிர்ப்பையும் காண்பிக்காது அமைதி பேணுகிறது என நான் கருதுகிறேன். சிறிலங்காக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 100 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் அழுத்தம் கொடுத்தார். ஆனால் சிறிலங்கா கடற்படையினர் தற்போது நான்கு மீனவர்களைக் கொன்றுள்ள நிலையில் சல்மான் குர்சித் இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார்?

ஆளும் காங்கிரசிற்கு முன்னர் ஆதரவு வழங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி, ஈழத்தமிழர் விவகாரத்தை இந்தியா கைவிட்டுள்ளது எனக் குற்றம் சுமத்த வேண்டும். இந்தியாவில் புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்னமும் ஆறு வாரங்களில் இடம்பெறவுள்ள நிலையில், மக்களின் உணர்வலைகள் மற்றும் அரசியல் அவாக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்மோகன் சிங் அரசாங்கம் உந்துதல் வழங்குகின்ற கோட்பாடானது புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது. இந்தியாவின் ஆளும் காங்கிரசின் கோழைத்தனமானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை இந்தியா தட்டிப்பறிக்கிறது என சிறிலங்கா தவறாகக் கற்பிதங் கொள்ளக் கூடாது.

ராஜபக்ச அரசாங்கத்தின் பிரதிபலிப்பு என்ன என்பதை நான் வாசித்த போது அதிர்ச்சியடையவில்லை: நன்றி, அமெரிக்காவால் தலைமை தாங்கப்படும் ஜனநாயக நாடுகளின் அழுத்தத்திற்கு இந்தியா உட்பட்டிருந்தது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஜனநாயக ஆட்சி இடம்பெறாத சீனா மற்றும் பாகிஸ்தான் போன்றன சிறிலங்காவுக்கு ஆதரவாக உள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும். இதன்மூலம் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற இந்தியாவின் கோட்பாடு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.

பெருமளவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் மனித உரிமையாளர் என்ற வகையில், போரில் சரணடைந்த புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கக் கூடாது என்பதே எனது கருத்தாகும். இது எனக்கு வேதனை அளிக்கிறது. அதிபர் ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் ஆசிர்வாதத்துடனும் ஆதரவுடனும் போரில் பல்வேறு மீறல்களைப் புரிந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது நான் எவ்விதத்திலும் கருணை காண்பிக்கவில்லை.

சனல் 04 தொலைக்காட்சி சேவையானது சிறிலங்காப் படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமன்றி அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராகவும் மேற்கொண்ட படுகொலைகளை ஆதாரப்படுத்தி செய்தி வெளியிடாதிருந்திருந்தால், உலக நாடுகளுக்கு சிறிலங்காவில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிந்திருக்காது. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணையானது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள சமூகம் மீது இந்தியா அழுத்தம் கொடுத்திருந்தது. ஆனால் இவையெல்லாம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் காலத்தில் மட்டுமே இடம்பெற்றது. தற்போது இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்கின்ற எந்தவொரு காரியத்திலும் இறங்கவிரும்பவில்லை. இவ்வாறு சிறிலங்காவைப் பகைப்பதன் மூலம் சீனாவுடன் நல்லுறவைப் பேணும் சிறிலங்காவிலிருந்து தனிமைப்படுவதுடன் தான் ஏனைய அயல்நாடுகளின் பகையையும் சம்பாதிக்க வேண்டியேற்படலாம் என இந்தியா கருதுகிறது. ஆனால் நாங்கள் எவ்வளவு காலம் ஆளும் சிங்கள ஆட்சியாளர்களைச் சமாதானப்படுத்தி, தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதாக வாக்குறுதி அளிக்க முடியும்? சிங்களவர்களும் தமிழர்களும் இரு வெவ்வேறு மொழிகளைப் பேசுவதாக யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் தமிழ் மொழிக்கு இடமளிக்கப்படவில்லை. சிறிலங்காவில் உள்ள காவற்துறை நிலையங்களில் கூட தமிழ் மொழியில் முறைப்பாடு பதியப்படுவதில்லை.

இந்தியாவின் அயல்நாடான சிறிலங்காவைப் பகைக்காது அதனுடன் சமாதானமாக இந்தியா நடந்து கொள்வதை நான் வரவேற்கிறேன். ஆனால் தனது நாட்டில் சீனா செல்வாக்குச் செலுத்துவதற்கான அனுமதியை சிறிலங்கா வழங்கியுள்ளது மிக மோசமான ஒன்றல்லவோ? மறுபுறத்தே, திருகோணமலைத் துறைமுகம் மற்றும் சில துறைமுக அபிவிருத்தியை சீனா மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்ற நாடாக சிறிலங்கா மாறியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் தன்னால் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்பளிக்கத் தவறும் பட்சத்தில் நாம் அதனைத் தட்டிக்கேட்க முடியும். ஏற்கனவே பேரவையில் முன்வைக்கப்பட்ட இரண்டு தீர்மானங்களை சிறிலங்கா மதிக்கத் தவறியுள்ளது. இவையிரண்டையும் இந்தியா ஆதரித்திருந்தது. சிறிலங்காவால் இழைக்கப்பட்ட மீறல்களுக்கு சிறிலங்கா தனது சொந்த விசாரணைப் பொறிமுறையை அமைத்து பொறுப்பளிக்க முடியும் என்பது இந்தியாவின் வாதமாகும். ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது.

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலுக்கான விளக்கவுரைகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவொரு அரசியற்கட்சியும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற இரண்டு பிரதான கட்சிகள் இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்குக் கூட முன்வரவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் அரசியல் அடித்தளமாகக் காணப்படும் Aam Aadmi Party (AAP) கட்சி தனது தேர்தல் விளக்கவுரையில் மனித உரிமை விவகாரத்தை முன்னுரிமைப்படுத்தியிருக்க வேண்டும்.
மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். AAP கட்சி இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆனால் இதன் தலைவரான அர்வின்ட் கேஜ்றிவெல் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இக்கட்சி இந்திய அரசியல் நிலைப்பாட்டை மாற்றமுடியும். நாட்டில் ஊழல் மோசடிகளை ஒழித்து பன்மைவாதக் கருத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் இன்றைய தேவையாகும்.

மேற்கூறப்பட்ட அரசியல் சக்திகளின் கோட்பாடுகளுடன் ஒத்து சிறிலங்கா அரசாங்கம் செயற்படும் பட்சத்தில் இது போர்க் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்க வேண்டியேற்படாது. ஆனால் ராஜபக்ச தொடர்ந்தும் சர்வதிகாரியாகவே செயற்படுகிறார். தனது சொந்த மக்களைக் குறிப்பாக தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் சிறிலங்காவுடன் இந்தியா அமைதிபேணுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். நீதிக்காகக் கோரிக்கை விடுகின்ற மக்களின் குரல்களை தேர்தல்கள் அடக்குகின்றன.

நான் கொழும்பில் தங்கியிருந்த போது நள்ளிரவன்று நான் தங்கியிருந்த விடுதியில் எனது கதவின் மீது தட்டப்பட்டது. நான் கதவைத் திறந்த போது அங்கே காவற்துறையினர் நின்றிருந்தனர். அவர்கள் எனது அறையைத் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அன்றைய பகல் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் நான் கோரியிருந்தமையே என் மீதான குற்றச்சாட்டாகக் காணப்பட்டதை என்னால் தற்போது நினைவுபடுத்த முடிகிறது.

ad

ad