பனாமா ரிவிவ் மூலம் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் மற்றும் 22 பங்காளர்கள் சம்பந்தமாக பணச் சலவை குற்றச்சாட்டு குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.
இலங்கையின் நிதி குற்றம் தொடர்பாக செயற்பட்டு வரும் அனைத்து தரப்பும் மிகவும் அறிவியல் ரீதியாக இந்த விடயம் தொடர்பில் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஆலோசகர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஊழல் எதிர்ப்பு முன்னணி இதற்கு முன்னர் வெளியிட்ட சீசெல்ஸ் மற்றும் துபாய் வழங்கிகள் ஊடாக பரிமாறப்பட்ட இலங்கையின் அரசியல்வாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள், உறவின்கள் வங்கிக்கணக்குகள் தொடரபான முக்கியமான பல தகவல்களை பனாமா வெளியீட்டின் மூலம் கண்டறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு முன்னணி செய்துள்ள 512 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளில் கூட முன்னேற்றம் இல்லை.
விசாரணைகள் முடிவடைந்த 40 ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இன்னும் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களுக்கும் பனாமா தகவல் வெளியீட்டுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எம்மால் புறந்தள்ளிவிட முடியாது.
சரியான விசாரணைகளை நடத்தாது போனால், இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கொள்ளையிடப்பட்ட இந்த பெருந்தொகை பணத்தை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வர முடியாது போகும்.
இதனால், தீர்மானகரமான தலையீட்டை மேற்கொள்ளும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.